திருவனந்தபுரம்: கேரள சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் உரையாற்றிய அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான், அரசு தயாரித்துக் கொடுத்த உரையை எந்த மாற்றமும் இன்றி அப்படியே வாசித்துள்ளார்.
தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் அம்மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
எனினும் ஆளுநரிடம் அளிக்கப்பட்ட உரையில் எந்த மாற்றமும் செய்யப்படாததால் பிரச்சினை ஏதும் வெடிக்கவில்லை.
அண்மையில் தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, மாநில அரசு தயார் செய்து கொடுத்த உரையில் சில மாற்றங்களைச் செய்ததாக ஆளும்தரப்பு புகார் எழுப்பியது. இதையடுத்து பேரவையில் இருந்து வழக்கத்துக்கு மாறாக முன்கூட்டியே வெளியேறினார் ஆளுநர்.
இந்நிலையில், கேரள சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி உள்ளது. மரபுப்படி இத்தொடரின் துவக்க நிகழ்வாக அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் உரையாற்றினார்.
கேரளாவில் உள்ள பல்கலைக்கழகங்களின் நிர்வாகம், அவற்றில் செய்யப்படும் நியமனங்கள் தொடர்பாக ஆளுநர் தனது எதிர்ப்பை அவ்வப்போது பதிவு செய்து வருகிறார். இதுகுறித்து பேரவையில் உரையாற்றும்போது அவர் குறிப்பிட வாய்ப்புள்ளதாகக் கருதப்பட்டது. ஆனால் அவ்வாறு ஏதும் நிகழவில்லை.
மாறாக மத்திய அரசை விமர்சிக்கும் வரிகளை ஆளுநர் ஆரிஃப் முகமது கான் எந்த மாற்றமும் இன்றி அப்படியே வாசித்தார்.