புதுடெல்லி: ஏர் இந்தியா நிறுவனம், அதன் விமானங்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் மதுபான சேவை தொடர்பான கொள்கையில் மாற்றம் செய்துள்ளது.
அண்மையில் நிகழ்ந்த சில விரும்பத்தகாத சம்பவங்களை அடுத்து அந்நிறுவனம் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
ஏர் இந்தியா விமானங்களில் சென்ற சில பயணிகளின் முறைகேடான நடத்தை குறித்து கடந்த சில நாள்களாக ஊடகங்களில் பரபரப்புச் செய்திகள் அடுத்தடுத்து வெளியாகின. அதன் எதிரொலியாக ஜனவரி 19ஆம் தேதி மதுபான சேவை தொடர்பான ஏர் இந்தியாவின் கொள்கை மாற்றி அமைக்கப்பட்டது.
அதன்படி, விமானப் பணியாளர்கள் பயணிகளுக்கு மதுபானம் பரிமாறினாலொழிய, பயணிகளாகவே சொந்தமாக மது அருந்த அனுமதிக்கப்படாது.
மது அருந்தும் பயணிகளை விமானப் பணியாளர்கள் கவனமாக அடையாளம் காணுமாறும் தேவைப்பட்டால் கூடுதல் மதுபானம் பரிமாறுவதை சாமர்த்தியமாக மறுக்கும்படியும் விமானப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
"மதுபான சேவை நியாயமான, பாதுகாப்பான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும்," என்று திருத்தியமைக்கப்பட்ட கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் தொடர்பாக, மதுபான சேவை மறுப்பு குறித்து 'செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை' என்ற பட்டியல் தொகுப்பை ஏர் இந்தியா வெளியிட்டுள்ளது.
"விமானப் பணியாளர்கள், பயணிகளிடம் பாரபட்சம் பாராமல் கண்ணியமாக நடக்க வேண்டும். அவர்களுடைய நடத்தை ஏற்க இயலாத வகையில் இருந்தால், அதை பணிவாக தெரிவிக்க வேண்டும்.
"அதிகம் குடித்திருக்கிறீர்கள் என்று பயணிகளிடம் கூற வேண்டாம். பயணிகள் தங்கள் குரலை உயர்த்திப் பேசினாலும், விமானப் பணியாளர்கள் அவர்களைப் பொறுமையுடன் கையாள வேண்டும்.
"இத்துடன் பிரச்சினை தீர்ந்துவிட்டது என்று விமானப் பணியாளர்கள் மெத்தனமாக இருந்துவிடக்கூடாது. மதுபோதையில் இருக்கும் பயணிகளை உறுதியுடனும் மரியாதையுடனும் கையாள வேண்டும்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, மதுபோதையில் இருக்கும் பயணிகளை அடையாளம் காண, அமெரிக்காவின் தேசிய உணவக சங்கத்தின் போக்குவரத்து விளக்கு அமைப்புமுறை பயன்படுத்தப்பட வேண்டும் என்று ஏர் இந்தியா கூறியுள்ளது. இந்த அமைப்புமுறையின்கீழ் பயணிகளின் நடத்தையை பச்சை, மஞ்சள் அல்லது சிவப்பு என வகைப்படுத்தலாம்.
விமானத்தில் ஏறுவதற்குமுன் பயணிகளின் தெளிவற்ற பேச்சு, தடுமாறும் நடை, மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்துதல், அச்சுறுத்தும் நடத்தை போன்ற அறிகுறிகள் உள்ளனவா என்பதை விமானப் பணியாளர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் ஏர் இந்தியா கூறியுள்ளது.

