புதுடெல்லி: இந்தியாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா உடனான மூன்று போர்களின் மூலம் பாகிஸ்தான் பாடம் கற்றுக்கொண்டுள்ளது என்றும் இரு தரப்புக்கும் இடையே அமைதி நிலவ வேண்டும் என விரும்புவதாகவும் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீஃப் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இத்தகைய சூழலில் கோவாவில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரிக்கு இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டதாக இந்திய ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 12 ஆண்டுகளாக பாகிஸ்தான் வெளியறவு அமைச்சர் பொறுப்பில் இருந்த யாரும் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவில்லை.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், சீனாவும் ரஷ்யாவும் பங்கேற்க உள்ள கூட்டத்தில் பங்கேற்க வருமாறு இந்தியா விடுத்துள்ள அழைப்பு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த அழைப்பானது அனைத்துலக அரசியல் அரங்கில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளதாக துறைசார் நிபுணர்கள் கருதுகின்றனர்.
அணு ஆயுதப் போர்:
போம்பியோ அதிர்ச்சித் தகவல்
இதற்கிடையே, கடந்த 2019ஆம் ஆண்டு நிலவிய சூழலில் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபட தயார் நிலையில் இருந்ததாக அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ தெரிவித்துள்ளார்.
அவர் எழுதியுள்ள புத்தகத்தில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது.
காஷ்மீரின் புல்வாமா பகுதியில் இந்திய பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய வீரர்கள் பலர் கொல்லப்பட்டதால் இந்தியா கடும் ஆவேசமடைந்தது.
"இதையறிந்து அன்றைய இந்திய வெளியுறவு அமைச்சரான சுஷ்மா சுவராஜை நான் தொடர்புகொண்டு பேசியபோது, இந்தியா மீது பாகிஸ்தான் அணுஆயுத தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என்றும் இந்தியாவும் உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறினார்.
"எனக்கு ஓரிரு நிமிடங்கள் தருமாறு கேட்டுக்கொண்டேன். பின்னர் பாகிஸ்தான் ராணுவத் தளபதியுடன் பேசியபோது அணு ஆயுதப் போர் நடத்தும் எண்ணமில்லை என்றார்.
"இரு தரப்புமே அணு ஆயுதப் போரை நடத்தும் எண்ணம் கொண்டிருக்கவில்லை என்பதைப் புரிய வைக்க எனக்கு சில மணி நேரம் தேவைப்பட்டது," என மைக் போம்பியோ தாம் எழுதியுள்ள புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.