அகமதாபாத்: கோத்ரா கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 22 பேரையும் குஜராத் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
உரிய ஆதாரங்கள் இல்லாததால் குற்றம்சாட்டப்்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டதாக நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத்தில் பெரும் கலவரம் வெடித்தது. கோத்ரா பகுதியில் கலவரத்துக்குப் பிறகும் நீடித்த வன்முறைச் சம்பவங்களின்போது இரு குழந்தைகள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பாக அம்மாநில காவல்துறை 22 பேரை கைது செய்தது. இந்த வழக்கின் விசாரணை பஞ்சமால் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் தங்களுக்கு எதிரான ஆதாரங்களை அழிக்கும் நோக்கில் சில நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அரசுத்தரப்பு குற்றம்சாட்டி இருந்தது.
குறிப்பாக 2002, பிப்ரவரி 28ஆம் தேதி கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களை குற்றம்சாட்டப்பட்டவர்கள் எரித்துவிட்டதாக நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டது.
ஆனால் தங்களுக்கு எதிரான ஆதாரங்களை அரசுத்தரப்பு நீதிமன்றத்தில் அளிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டை நிரூபிக்க தேவைப்படும் சாட்சிகளும் இல்லை என குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
கலவரம் நடந்து முடிந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் 22 பேரை காவல்துறை கைது செய்து வழக்கு தொடுக்கப்பட்டதாகவும் இறந்தவர்களின் உடல்கள் கிடைக்காதபோது 22 பேரையும் குற்றவாளிகள் என்று குறிப்பிடுவதை ஏற்க இயலாது என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது.
இதையடுத்து உரிய ஆதாரங்கள் இல்லாததால் 22 பேரையும் விடுதலை செய்வதாக வழக்கை விசாரித்த நீதிபதி தீர்ப்பளித்தார். குற்றம்சாட்டப்பட்ட 22 பேரில் எட்டு பேர் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோது காலமாகிவிட்டனர்.
கடந்த 2002ஆம் ஆண்டு சபர்மதி விரைவு ரயிலின் சில பெட்டிகளுக்கு சிலர் தீ வைத்தனர். இதில் 59 பயணிகள் உடல் கருகி உயிரிழந்தனர். இதையடுத்து குஜராத்தில் பெரும் கலவரம் வெடித்தது.
அப்போது கோத்ரா பகுதியில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களின்போது ஏராளமான சிறுபான்மையினர் படுகொலை செய்யப்பட்டனர்.
திலோல் எனும் கிராமத்தில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த 17 பேர் கொல்லப்பட்டனர்.