புதுடெல்லி: முதல்முறையாக கொவிஷீல்ட் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்களுக்கு இரண்டாவது முறையாக கோவாக்சின் செலுத்த அனுமதி இல்லை என டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மதுர் மிட்டல் என்பவர், கடந்த 2021ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அதில், "முதல் தவணையாக போட்டுக்கொண்ட கொவிஷீல்ட் தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்பட்டன. எனவே, இரண்டாவதாக கோவாக்சின் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள அனுமதிக்கும்படி உத்தரவிடவேண்டும்," எனக் கோரியிருந்தார். இந்நிலையில், இம்மனு நீதிபதி பிரதிபா எம்.சிங் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, "தடுப்பூசியை மாற்றிப்போடுவது தொடர்பான நான்காவது சோதனை இன்னும் முடியாததால், அனுமதி வழங்கமுடியாது," என மத்திய அரசு வழக்கறிஞர் கூறினார்.
புதுடெல்லி: ஹைதராபாத்தின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள 'இன்கோவாக்' என்ற நாசி (மூக்கு) வழி போடப்படும் கொரோனா தடுப்பு மருந்து மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சர் மான்சுக் மாண்டவியா, அறிவியல், தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோர் இந்தத் தடுப்பு மருந்தை டெல்லியில் நேற்று முன்தினம் அறிமுகப்படுத்தினர்.
ஊசியின்றி, வலியின்றி நாசி யில் 'ஸ்பிரே' போல் அடித்துக்கொள்ளக்கூடிய இந்த 'இன்கோவாக்' தடுப்பு மருந்தை 18 வயது முதல் அதற்கு மேலானோர் வரை கூடுதல் தடுப்பூசியாக பயன் படுத்திக் கொள்ளலாம்.
கொவிஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசியை இருமுறை போட்டுக்கொண்டு கூடுதல் தடுப்பூசி போடாதவர்கள் இந்த நாசி வழி தடுப்பு மருந்தை போட்டுக்கொள்ளலாம் என்றும் இதனால் நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் என்றும் பரிசோதனை முடிவுகள் தெரிவித்துள்ளன.
இம்மருந்து தனியாருக்கு ரூ.800க்கும் மத்திய, மாநில அரசுகளுக்கு ரூ.325க்கும் விற்பனை செய்யப்படும் என பாரத் பயோடெக் நிறுவனம் கூறியுள்ளது.


