புதுடெல்லி: எல்லைப் பகுதிகளில் சீன ராணுவம் தொடர் கட்டுமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான மோதல் தீவிரமடையும் என்றும் லடாக் காவல்துறையின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வறிக்கை அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்தியா, சீன இடையேயான எல்லைப் பகுதியானது ஏறத்தாழ 3,500 கிலோ மீட்டர் தூரம் நீள்கிறது. குறிப்பிட்ட எல்லைப் பகுதிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் சீன ராணுவத்தினர் அவ்வப்போது ஊடுருல் முயற்சிகளில் ஈடுபடுவதும் இந்திய ராணுவம் அதை முறியடிப்பதும் வாடிக்கையாக உள்ளது.
அந்த வகையில் லடாக் எல்லையிலும் அத்துமீறல்கள் உள்ளன. இந்நிலையில், லடாக் எல்லையில் சீன ராணுவம் தனது கட்டமைப்பை தொடர்ந்து மேம்படுத்தி வருவதாக லடாக் காவல் துறையின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த கால மோதல்கள், எல்லைப் பகுதியின் தற்போதைய நிலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும் உள்ளடக்கி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

