புதுடெல்லி: பழங்குடியினர் வாழ்க்கை, நகர வாழ்க்கையில் இருந்து வேறுபட்டது என்றும் அதற்கென்று சொந்த சவால்களைக் கொண்டுள்ளது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நேற்று வானொலி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றிய அவர், பழங்குடி சமூகத்தினரும் அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களும் அதிக அளவில் பத்ம விருதுகளைப் பெற்றது நாட்டுக்குப் பெருமை தரக்கூடிய விஷயம் என்றார் பிரதமர்.
"ஒடிசாவில், சிறுதானிய இயக்கத்தின் ஒரு பகுதியாக சுந்தர்கார் என்ற பழங்குடி மாவட்டத்தின் மகளிர் சுய உதவி குழு ஒன்று பிஸ்கட்டுகள், கேக்குகள், உண்பதற்கான பிற பொருள்களை சிறுதானியங்களில் இருந்து உருவாக்கி வருகின்றனர்," என்றார் பிரதமர் மோடி. ஏறத்தாழ 1,500 பெண்கள் இந்தப் பணியில் ஈடுபட்டு உள்ளதாகஅப்பெண்களின் வருவாய் அதிகரித்துள்ளது என்றும் பிரதமர் கூறினார்.
"தமிழகத்தின் உத்திரமேரூரில் உள்ள கல்வெட்டுகள் உலகம் முழுவதையும் வியக்க வைத்துள்ளது. 1,200 ஆண்டுகளுக்கு முந்தைய அக்கல்வெட்டுகளில் அரசியலமைப்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. கிராம சபைகளை எப்படி நடத்த வேண்டும் என்றும் அதில் உறுப்பினர்கள் தேர்ந்து எடுக்கும் செயல்முறை எப்படி இருக்க வேண்டும் என்றும் அக்கல்வெட்டுகளில் விளக்கப்பட்டுள்ளது," என்றார் பிரதமர் மோடி.

