புதுடெல்லி: நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரவிருப்பதால் கடந்த 8½ ஆண்டுகளில் பா.ஜனதா அரசு செய்த சாதனைகளை மக்களிடம் பரப்ப வேண்டும். இதை சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளை சேர்ந்த மக்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி, தன் அமைச்சர்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.
இலவச உணவு தானியம் போன்ற நலத்திட்டங்கள் அனைத்து சாதி, மத வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும், அனைத்து மாநிலங்களின் ஏழை எளியவர்க்கு எவ்வாறு பயன் அளித்தன என்பதை விளக்கிச் சொல்ல வேண்டும். அதே வேளையில் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்களின் நலன் கருதியும் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அவர்களுக்கு பல்வேறு வழிகளில் உதவிய அந்தத் திட்டங்களின் விவரங்களுடன் நடுத்தர வகுப்பினரை அணுகி அது குறித்து அவர்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று தன் அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

