புதுடெல்லி: மத்திய அரசு ஏழைகளின் வாழ்வை மேம்படுத்துவதையே தனது இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருவதாக இந்திய அதிபர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியதை அடுத்து, நாடாளுமன்றக் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் அரசு எனும் பெயரை மத்திய அரசு பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார்.
எதிர்வரும் 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக உருவாக்க இந்திய குடிமக்கள் அனைவரும் தங்கள் கடமைகளை உணர்ந்து செயல்பட வேண்டும் என அதிபர் வலியுறுத்தினார். நாட்டின் கடந்தகால பெருமிதத்தை நவீனத்துடன் இணைப்பதாக மக்களின் செயல்கள் இருக்க வேண்டும் என்றார் அதிபர்.
"நாம் உருவாக்க உள்ள இந்தியா என்பது தற்சார்பு கொண்டதாக, மக்களின் விருப்பங்களை நிறைவேற்றக்கூடியதாக இருக்க வேண்டும். அத்தகைய இந்தியாவில் ஏழ்மை இருக்காது. நடுத்தர மக்களும் அனைத்தையும் பெற்றிருப்பார்கள்.
"இளையர் சக்தி, பெண்கள் சக்தி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து, நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும். இந்தியாவின் பன்முகத்தன்மை துடிப்பானது. நாட்டின் ஒற்றுமை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாதது," என்றார் அதிபர் திரௌபதி முர்மு.
கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் நாடு முழுவதும் ஏறத்தாழ 11 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஏழைகளின் சிரமங்களைப் போக்கும் வகையில் வீடு கட்டுதல், புதிய மின் இணைப்பு வழங்குதல், எரிவாயு உருளை வழங்குதல் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
இத்தகைய நடவடிக்கைகள் காரணமாக, பலனடைந்த குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் தன்னம்பிக்கை நிறைந்த குடிமக்களாக வளர்கின்றனர் என்றும் கடந்த ஏழு ஆண்டுகளில் மட்டும் ஏழைகளுக்காக நாள்தோறும் ஏறத்தாழ 11 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன என்றும் அதிபர் கூறினார்.
பல்வேறு விவகாரங்களில் உலக நாடுகளுக்கு உரிய தீர்வுகளை வழங்கக்கூடிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அரசியல் நிலைத்தன்மையைப் பொறுத்தவரையில் மற்ற நாடுகள் அனைத்தையும் இந்தியா முந்தி உள்ளதாகக் கூறினார்.
இதையடுத்து உரையாற்றிய துணை அதிபர் ஜக்தீப் தன்கர், மத்திய அரசு ஒப்பிட முடியாத வேகத்தில் இயங்கி வருவதாகவும் கடந்த ஒன்பது ஆண்டுகளில் நாட்டில் பல்வேறு ஆக்கபூர்வமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
நாட்டில் மின்னிலக்கத் தொழில்நுட்பம் மிகப் பெரிய வளர்ச்சியை கண்டுள்ளதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.
இந்நிலையில் அதிபர், துணை அதிபரின் உரைகள் தேர்தல் பிரசார அறிக்கைகளைப் போல் இருப்பதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
"மத்திய அரசு இதுவரை செய்துள்ளவற்றை புகழ்ந்து பேசிய அதிபர், மத்திய அரசு செய்யத் தவறிய ஏராளமான விஷயங்கள் குறித்து எதையுமே குறிப்பிடவில்லை," என முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் கூறியுள்ளார்.

