மும்பை: விஸ்தாரா விமான நிறுவனத்தின் பணியாளரைத் தாக்கிய இத்தாலியப் பெண் பயணி மும்பை விமான நிலையத்தில் அவ்விமானம் தரை இறங்கியதும் கைது செய்யப்பட்டார்.
நேற்று முன்தினம் விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
விஸ்தாரா விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று அபுதாபியில் இருந்து மும்பை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது இத்தாலியைச் சேர்ந்த 45 வயதுப் பெண்மணி திடீரென எழுந்து நின்று விமானப் பணிப்பெண் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் அரைகுறை ஆடையுடன் காணப்பட்டதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
விமானத்தின் எகானமி பிரிவில் பயணச்சீட்டு வாங்கியிருந்த அவர், தம்மை முதல் வகுப்பு (பிசினஸ் கிளாஸ்) இருக்கையில் அமர வைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். வாக்குவாதம் செய்தபடியே தன் அருகில் இருந்த விமானப் பணியாளரை அவர் தாக்கியதாகவும், மற்றொரு பணியாளர் மீது எச்சில் உமிழ்ந்ததாகவும் தெரிகிறது.
இதுகுறித்து விஸ்தாரா விமானி மும்பை விமான நிலைய தரைக்கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து விமானம் தரையிறங்கிய பின்னர் அந்தப் பெண் பயணி கைதானார். இச்சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இந்திய விமானப் போக்குவரது இயக்குநரகமும் விஸ்தாரா நிறுவனமும் உறுதி செய்துள்ளன. அப்பெண்மணிக்கு மும்பை நீதிமன்றம் பிணை வழங்கி உள்ளது.

