புதுடெல்லி: பங்குச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
அதானி குழும நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக பங்குச் சந்தையில் அந்நிறுவனப் பங்குகளின் மதிப்பு பெரும் வீழ்ச்சி அடைந்தது. இதனால் இந்திய பங்குச் சந்தைகளின் வர்த்தகத்திலும் பாதிப்பு ஏற்பட்டது.
நேற்று முன்தினம் நிதிநிலை அறிக்கை தாக்கலானதும் இந்தியப் பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டன. முதலீட்டாளர்கள் தரப்பில் மகிழ்ச்சி வெளிப்பட்டதால் வங்கித்துறை பங்குகளின் மதிப்பு கூடியது.
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளின் வர்த்தகம் லாபத்துடன் தொடங்கியதை அடுத்து இந்திய ரூபாயின் மதிப்பும் ஏற்றம் கண்டது.
எனினும் இந்நிலைக்கு நேர்மாறாக நேற்று பங்குச் சந்தை வர்த்தகம் வீழ்ச்சி கண்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று காலை வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 383 புள்ளிகள் சரிந்தது. இதேபோல் தேசிய பங்குச் சந்தை குறியீடும் 45 புள்ளிகள் வரை சரிந்தது.
எனினும் இந்நிலை விரைவில் மாறும் என்றும் புதிய முதலீடுகள் வரும்போது சந்தை மதிப்பு கூடும் என்றும் மத்திய அரசுத் தரப்பு நம்பிக்கை தெரிவித்தது.
இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தீவிர ஆலோசனை மேற்கொண்டார்.
அமித்ஷா, ராஜ்நாத் சிங், பியூஷ் சாவ்லா, நிர்மலா சீதாராமன், நிதின் கட்காரி உள்ளிட்டோர் அதில் பங்கேற்றனர்.

