லாரி மீது பேருந்து மோதிய
விபத்தில் 18 பேர் படுகாயம்
புதுடெல்லி: உத்தரபிரதேச மாநில குதார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு ஷாஜஹான்பூரில் இருந்து பாலியா நோக்கிச் சென்ற பேருந்து, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 18 பேர் படுகாயமடைந்தனர். அப்பகுதியில் அடர்ந்த மூடுபனி காரணமாக விபத்து ஏற்பட்டதாகக் காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.ஆனந்த் கூறினார்.
ராமர் கோயிலுக்கு புனித கற்கள்
புதுடெல்லி: அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலில் கருவறையில் வைக்கப்படும் ராமர், சீதை சிலைகளைச் தயாரிக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இதற்கு, நேர்மறை அதிர்வுகளை தரக்கூடிய புனித கற்களான சாளக்கிராம கற்களில் சாமி சிலைகளை செதுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தக் கற்கள் இமயமலை அருகே உள்ள கண்டகி நதியில் மட்டுமே உற்பத்தியாகக் கூடியவை. இந்த நிலையில் சீதையின் பிறப்பிடமாக அறியப்படும் நேப்பாளத்தின் ஜனக்பூரில் இருந்து லாரி மூலம் அயோத்திக்குப் புனிதக் கற்கள் கொண்டு வரப்பட்டன. முன்னதாக நேப்பாள மக்கள் பயபக்தியுடன் கற்களுக்குப் பூஜை செய்து வழியனுப்பி வைத்தனர்.
'நித்தியானந்தா மீது
நடவடிக்கை இல்லை'
புதுடெல்லி: நித்தியானந்தாவுக்கு எதிராக அனைத்துலக காவல் அமைப்பான இண்டர்போல் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
குஜராத் காவல்துறை, நித்தியானந்தா மீதான பல்வேறு வழக்குகள் தொடர்பில் இண்டர்போல் உதவியை நாடியுள்ளதாக தகவல்கள் வெளியானது. இன்டர்போல் மூலமாக 'புளூகார்னர்' எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டு நித்தி யானந்தாவை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் குஜராத் காவல்துறையினர் தெரிவித்து இருந்தனர்.
இதற்கிடையே இன்டர்போல் தலைமைச் செயலகத்தில் இருந்து இரண்டு கடிதங்கள் வெளியிடப்பட்டன. அதில் நித்தியானந்தாவுக்கு எதிராக எந்தவித எச்சரிக்கை அறவிப்போ அல்லது கைது ஆணையோ பிறப்பிக்கப்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

