மும்பை: பதினெட்டு வயது இளம்பெண்ணுக்கு கை மாற்று அறுவை சிகிச்சை செய்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
இதையடுத்து மற்றவர்களைப் போன்று தானும் இயல்பான வாழ்க்கையை வாழ முடியும் என அறுவை சிகிச்சையால் பலன் அடைந்துள்ள இளம்பெண் சாம்யா மன்சூரி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம், பரூக் மாவட்டத்தைச் சேர்ந்த சாம்யாவுக்கு பிறக்கும்போதே வலது கை கிடையாது. இதனால் பல்வேறு சிரமங்களை, கிண்டல்களை எதிர்கொண்டதாகச் சொல்கிறார்.
கணினித்துறையில் பட்டப்படிப்பு மேற்கொண்டுள்ள அவர், அடுத்து இதே துறையில் பட்டமேற்படிப்பை தொடர திட்டமிட்டுள்ளார்.
“ஒரு கை இல்லாமல் பதினெட்டு ஆண்டுகளைக் கடந்துவிட்டேன். சிறு வயதில் பள்ளிக்குச் செலலும்போது வகுப்புத் தோழிகள் பலர் என்னைக் கிண்டல் செய்வார்கள். அதனால் பொது இடங்களுக்குச் செல்வதை அறவே தவிர்த்து வந்தேன். இனி அத்தகைய கிண்டல்களுக்கு வாய்ப்பு இல்லை.
“புதிய கை பொருத்தப்பட உள்ளதாக தகவல் வந்தது முதல் வாகனம் ஓட்டுவது உட்பட புதிய கையால் நிறைய விஷயங்களைச் செய்ய வேண்டும் என என் மனதில் கனவுகள் விரியத் தொடங்கின,” என்கிறார் சாம்யா.
தனது மகளுக்கு புதிய கை மாற்று அறுவை வெற்றிகரமாக நடந்துள்ளதால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பதாகச் சொல்கிறார் சாம்யாவின் தாயார் ஷெனாஸ் மன்சூரி.
கடந்த ஐந்து ஆண்டுகளாகவே இந்தத் தருணத்துக்காகக் காத்திருந்ததாகச் சொல்பவர், இப்போது பூமியில் மிகவும் மகிழ்ச்சியான தாய் தாமாகத்தான் இருக்க முடியும் என்கிறார்.
18 வயது நிரம்பிய பிறகுதான் சாம்யாவுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்று மருத்துவர்கள் கூறியதாகவும் கடந்த ஜனவரி 10ஆம் தேதிதான் தன் மகளுக்கு 18 வயது நிறைவடைந்தது என்றும் சொல்கிறார் ஷெனாஸ்.
“சில தினங்களுக்கு முன்புதான் சாம்யாவுக்குரிய மாற்று கை கிடைத்துள்ளது. இதையடுத்து, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தேறியது.
“சாம்யாவின் பெயரை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காகப் பதிவு செய்த சில நாள்களிலேயே கொடையாளர் கிடைத்தார். ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை குறித்து சாம்யாவுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டு வந்தன. எனவே, மனதளவில் அவர் அதற்குத் தயாராக இருந்தார்,” என்கிறார் சாம்யாவுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் நிலேஷ் சத்பாய்.