புதுடெல்லி: இணைய வழி சூதாட்டம், கடன் சேவை வழங்கும் 232 கைப்பேசி செயலிகளுக்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இவை அனைத்துமே வெளிநாட்டு நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட செயலிகள் எனத் தெரியவந்துள்ளது.
கைப்பேசி செயலிகள் மூலம் நாடு முழுவதும் பல்வேறு மோசடிகள் நிகழ்ந்து வருகின்றன. இதனால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர்.
குறிப்பாக இணையம் வழி நடைபெறும் சூதாட்டம் காரணமாக உயிரை மாய்த்துக்கொள்வோர் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.
மேலும், சீன செயலிகளைப் பயன்படுத்தி கடன் சேவை வழங்கும் சில தனியார் நிறுவனங்கள் பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபடுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. தவிர, கைப்பேசி செயலிகளை வைத்து இயங்கும் சில நிறுவனங்கள் இந்திய குடிமக்கள் தொடர்பான விவரங்களை முறைகேடாக மற்ற தரப்புகளுடன் பகிர்வதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சின் அறிவுறுத்தல்களை ஏற்று வெளிநாட்டு செயலிகளை முடக்கி உள்ளது மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்தது.
வெளிநாட்டுச் செயலிகளால் நாட்டின் பொருளியல் நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் இதுபோன்ற பல்வேறு அம்சங்களைக் கவனத்தில் கொண்டே செயலிகளுக்குத் தடைவிதிக்கப்படுவதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.