ரூ.5,400 மதிப்பு; உத்தரப் பிரதேச மாநில அரசு அதிரடி நடவடிக்கை
புதுடெல்லி: அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்டிருந்த ரூ. 5,400 கோடி மதிப்புள்ள ஒப்பந்த பணியை உத்தரப் பிரதேச மாநில அரசு ரத்து செய்துள்ளது. இதற்கான காரணத்தை அம்மாநில அரசு தெரிவிக்கவில்லை.
எனினும், உத்தரப் பிரதேச அரசின் இந்த நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொழிலதிபர் அதானி மத்தியில் உள்ள பாஜக அரசின் ஆதரவாளர், பிரதமர் மோடியின் நண்பர் என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகி்ன்றன. இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் உள்ள பாஜக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை அரசியல் களத்தில் விவாதங்களை எழுப்பி உள்ளன.
அம்மாநில அரசு செயல்படுத்த உள்ள 'ஸ்மார்ட் மீட்டர்' வழங்கும் திட்டத்துக்கான பணியைத்தான் அதானி குழுமம் ஏற்றிருந்தது.
பங்குச்சந்தையில் அதானி குழும நிறுவன பங்குகளின் மதிப்பு பெரும் சரிவை சந்தித்து வருகின்றன. இதனால் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளார் தொழிலதிபர் அதானி.
உத்தரப் பிரதேச அரசு அறிவித்த திட்டப்பணிக்குப் பல்வேறு நிறுவனங்களுக்கு மத்தியில் அதானி குழுமமும் விண்ணப்பித்திருந்தது. மற்ற நிறுவனங்களைவிட அதானி குழுமம் தனது ஒப்பந்தப் புள்ளியில் குறைவான தொகையைக் குறிப்பிட்டிருந்தபடியால், 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டப்பணி அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்பட இருந்தது.
இந்நிலையில், தவிர்க்க இயலாத காரணங்களால் இந்தத் டெண்டரை ரத்து செய்வதாக உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அதானி விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து மௌனம் காப்பது ஏன் என காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பி உள்ளார்.
பிரதமர் 'மௌனி பாபா' ஆக மாறிவிட்டார் என நேற்று நாடாளுமன்றத்தில் பேசியபோது அவர் விமர்சித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியையும் தொழிலதிபர் அதானியையும் தொடர்புபடுத்தி நாடாளுமன்றத்தில் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளைத் தெரிவித்த ராகுல் காந்தி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக எம்பி நிஷிகந்த் துபே வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக மக்களவை சபாநாயகருக்கு எழுதியுள்ள கடிதத்தில், எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் இத்தகைய குற்றச்சாட்டை ராகுல் காந்தி முன்வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
"பிரதமர் மோடி குறித்து ஆதாரமற்ற, அவதூறான, களங்கம் விளைவிக்கக்கூடிய குற்றச்சாட்டுகளை ராகுல் கூறியுள்ளார். உரிய ஆதாரங்களை அளிக்காமல் அவர் நாடாளுமன்ற அவையைத் தறவாக வழிநடத்தி உள்ளார்," என நிஷிகந்த் துபே எம்பி தெரிவித்துள்ளார்.

