புதுடெல்லி: உலகின் ஆகப்பெரிய ஐந்தாவது பொருளியல் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஊழலற்ற இந்தியா உருவாகிக் கொண்டிருப்பதாக மக்களவையில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
மக்களவையில் அதிபர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, முன்னர் இந்தியா உலகத்தை நம்பி இருந்தது என்றும் இப்போது இந்தியாவை உலகம் நம்பி இருக்கும் காலம் உருவாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசு நிர்வாகத்தில் நிலவி வந்த ஊழலில் இருந்து மக்களுக்கு விடுதலை கிடைத்திருப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, இந்தியாவின் அதிவேகமான வளர்ச்சி இன்று பலராலும் கவனித்துப் பேசப்படுகிறது என்றார்.
"அண்டை நாடுகளில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியா முன்னேறி வருகிறது. இந்த அரசின் சாதனை, இந்திய மக்களை பெருமையில் ஆழ்த்தி உள்ளது.
"எதிர்காலத்தைக் கணித்துக் கூறும் வல்லுநர்களுக்கு இந்தியா மீது பெரும் நம்பிக்கை உள்ளது. ஜி20 நாடுகளின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது இந்தியர்கள் அனைவருக்கும் பெருமை. சிறந்த முடிவுகளை எடுக்கக்கூடிய தேச நலனில் அக்கறை உள்ள நிலையான அரசு தற்போது உள்ளது," என்றார் பிரதமர் மோடி.
கல்வி தொடங்கி ஒவ்வொரு துறையிலும் இந்தியா புது வரலாற்றைப் படைத்து வருவதாகவும் நெருக்கடியான காலத்திலும்கூட மின்னிலக்க பரிவர்த்தனையில் இந்தியா வளர்ச்சி ககண்டுள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

