பெங்களூரு: கல்லூரி முதல்வரே மாணவியைச் சீரழித்துக் கொன்று, தூக்கில் தொங்கவிட்ட கொடூரம் கர்நாடகாவில் அரங்கேறி உள்ளது.
அங்குள்ள ராய்ச்சூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் அந்த மாணவி படித்து வந்தார்.
ராய்ச்சூர் மாவட்டத்தில் இயங்கி வருகிறது விஸ்வேஷ்வராய் பல்கலைக் கழகம். அதன் நிர்வாகத்தில் உள்ள கல்லூரியில் ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்களில் பலர் கல்லூரி விடுதியில் தங்கியுள்ளனர்.
கல்லூரி முதல்வரும் விடுதிப் பொறுப்பாளருமான ரமேஷ் என்பவர், விடுதி மாணவிகளிடம் அத்துமீறி நடந்துகொண்டுள்ளார். பல மாணவிகளுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் 17 வயது மாணவி ஒருவர் கல்லூரி விடுதியில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டதாக தகவல் வெளியானது.
இது குறித்து விடுதி மாணவிகளே உயிரிழந்த மாணவியின் குடும்பத்தாருக்குத் தகவல் தெரிவித்தனர். அலறியடித்துக் கொண்டு விரைந்து வந்த மாணவியின் குடும்பத்தார் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறியதுடன், போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதையடுத்து, காவல்துறை விசாரணை மேற்கொண்டது. விடுதி மாணவிகளிடம் விசாரித்தபோது, விடுதி பொறுப்பாளர் ரமேஷ் மாணவிகளிடம் தகாத முறையில் நடந்துகொண்டது தெரியவந்தது.
மேலும் உயிரிழந்த மாணவியை அவர் இடைவிடாமல் பாலியல் ரீதியில் சீண்டியதால் அம்மாணவி வேறு கல்லூரிக்குச் செல்ல முடிவெடுத்திருந்தார்.
இதையறிந்த ரமேஷ், சம்பவத்தன்று அம்மாணவியை தனது அறைக்கு அழைத்துச் சென்று சீரழித்துள்ளார். பின்னர் அம்மாணவியைக் கொன்று விடுதி அறை ஒன்றில் தூக்கில் தொங்கவிட்டுள்ளார்.
இதன் மூலம் மாணவியே தன் உயிரை மாய்த்துக் கொண்டதாக அவர் சித்திரிக்க முயன்றுள்ளார். காவல்துறை விசாரணையில் அனைத்தும் அம்பலமான நிலையில், ரமேஷ் தலைமறைவானார்.
எனினும், தீவிர தேடுதல் வேட்டையின் முடிவில் காவல்துறை அவரைக் கைது செய்துள்ளது. அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

