புதுடெல்லி: நாடு முழுவதும் மின்னிலக்க கிரெடிட் சேவை முறையை மத்திய அரசு அமல்படுத்த உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சு செய்து வருகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் பெரிய வங்கிகளில் இருந்து சாலையோர சிறு வியாபாரிகள்கூட கடன் பெற இயலும் என்றும் அனைத்து தரப்பினருக்கும் பயனுள்ளதாக அமையும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
"இந்த மின்னிலக்க கிரெடிட் சேவையானது, யுபிஐ சேவையைப் போலவே அறிமுகப்படுத்தப்படும். இந்த ஆண்டே இச்சேவையை அறிமுகப்படுத்த உள்ளோம்," என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சு சார்பில் உருவாக்கப்பட்டுள்ள யுபிஐ சேவைக்காக 'குரல் வழி' பணம் செலுத்துவதற்கான புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் மக்கள் விரைவில் தங்கள் மொழியிலேயே தொலைபேசியில் தொடர்புகொண்டு பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இயலும். 18 இந்திய மொழிகளில் இந்தச் சேவையைப் பெற முடியும்.
இந்த மின்னிலக்க கிரெடிட் சேவை அடுத்த சில மாதங்களில் வலுவாகக் கட்டமைக்கப்படும்.
தற்போது பயன்பாட்டில் உள்ள யுபிஐ முறையை அனைத்துலகப் பணப் பரிவர்த்தனை முறையாக மாற்றும் முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளது.
இது தொடர்பாக சிங்கப்பூர், நேப்பாளம், பூட்டான், இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் இணைந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மின்னிலக்க கிரெடிட் சேவை மூலம் பணப் பரிவர்த்தனைகள் மேலும் எளிதில் நடைபெறும் என்றும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பயனடையும் வகையில் மிக விரைவில் பத்து நாடுகளில் யுபிஐ சேவை விரிவாக்கப்படும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் யுபிஐ முறையை சிங்கப்பூரின் பேநவ் சிஸ்டமுடன் இணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் இதன் மூலம் எல்லை தாண்டிய பணப் பரிவர்த்தனைகள் எளிதாக்கப்படும் என்றும் சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

