புதுடெல்லி: அதானி குழும நிறுவனங்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியப் பங்குச் சந்தைக் கட்டுப்பாட்டு அமைப்பான 'செபி' இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்திய முதலீட்டாளர்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கான வழிமுறைகள் இருப்பது அவசியம் என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு அறிவுறுத்தியது.
பங்குச்சந்தையில் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் பெரும் சரிவை சந்தித்துள்ளன. ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையில் அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதானி நிறுவனப் பங்குகளின் மதிப்பு வேகமாக சரிவு கண்டு வருவதையடுத்து இந்தியப் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்களுக்குப் பெரும் இழப்பு ஏற்படும் என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அதானி விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியின் காண்காணிப்பின் கீழ் விசாரணைக் குழுவை அமைத்து உரிய வகையில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இம்மனுக்கள் மீதான விசாரணை விரைவில் நடத்தப்படும் என அண்மையில் உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்தது.
அதன்படி விசாரணை தொடங்கி உள்ளது. நேற்றுமுன்தினம் நடந்த விசாரணையின்போதே உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மேற்குறிப்பிட்ட உத்தரவுகளைப் பிறப்பித்தனர்.
"அதானி குழும நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை போல் மீண்டும் நடக்காமல் இருக்க என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இல்லையெனில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு ஒரு வழிமுறையை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
"கொள்கை விவகாரங்களில் தலையிட உச்ச நீதிமன்றம் விரும்பவில்லை. ஏனெனில், அது மத்திய அரசாங்கத்தின் வேலை," என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
முதலீட்டாளர்களின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு ஆர்வத்துடன் செயல்படுமானால் தற்போதைய ஒட்டுமொத்த நிலவரத்தை ஆராய நீதிபதி, துறைசார் நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிடும் என்று என்றார் தலைமை நீதிபதி.
இதற்கிடையே, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான 'செபி' சார்பில் முன்னிலையான வழக்கறிஞர், அதானி விவகாரம் தொடர்பாக 'செபி' உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இந்த வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு (நாளை) ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதானி குழும பங்குகள் சரிவடைந்தது தொடர்பாக அந்நிறுவனத்துடன் பேச இருப்பதாக எல்ஐசி நிறுவனத்தின் தலைவர் எம்.ஆர்.குமார் தெரிவித்துள்ளார்.
நெருக்கடியில் சிக்கியுள்ள அதானி குழுமத்தின் உயர்மட்ட அதிகாரிகளை, எல்ஐசி நிர்வாக குழு விரைவில் சந்திக்கும் என்றும் தற்போதைய நெருக்கடி நிலையை அதானி குழுமம் எவ்வாறு அணுக உள்ளது என்பது குறித்து விளக்கம் கேட்கப்படும் என்றும் அவர் கூறினார்.
எனினும், உயர் அதிகாரிகள் மட்டத்திலான இந்தப் பேச்சுக்கள் எப்போது நடைபெறும் என்பதை இப்போதே உறுதியாகத் தெரிவிக்கவில்லை என்றார் எம்.ஆர்.குமார்.
இதற்கிடையே, ஹிண்டன்பர்க் நிறுவன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை சட்ட ரீதியாக எதிர்கொள்ள அதானி குழுமம் தயாராகி உள்ளது என்றும் இதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த சட்ட நிறுவனத்தை அணுகியுள்ளதாகவும் ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.

