புதுடெல்லி: தமிழக மீனவர் பிரச்சினை மனிதாபிமான அடிப்படையில் அணுகப்பட வேண்டும் என மத்திய மீன்வளத்துறை இணையமைச்சர் முருகன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், அங்கு அந்நாட்டு மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துப் பேசியபோது, தமிழக மீனவர்கள் எதிர்கொண்டிருப்பது வாழ்வாதாரப் பிரச்சினை என்று குறிப்பிட்டார்.
இத்தகவலை கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தமது பயணத்தின்போது தலைமன்னார் பகுதிக்குச் சென்ற அவர், அங்கு இந்தியா, இலங்கை இடையேயான படகுப் போக்குவரத்துக்கான ஏற்பாடுகளை பார்வையிட்டார். இதன் மூலம் இரு நாட்டு மக்களுக்கு இடையேயான ஆழமான இணைப்பு, இருதரப்பு தொடர்பு, வணிக பரிமாற்றங்களுக்கு ஊக்குவிப்பு கிடைக்கும் என இந்தியத் தூதரகம் கூறியுள்ளது.
முன்னதாக மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரும் கடந்த மாதம் இலங்கை சென்றிருந்தார். அப்போது அவரும் தமிழக மீனவர் பிரச்சினை குறித்து இலங்கைத் தரப்புடன் ஆலோசனை மேற்கொண்டதாக இந்தியத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

