மகாராஷ்டிராவில் பரபரப்பு; பாஜகவுக்கு நெருக்கமான நில விற்பனையாளர் கைது
மும்பை: எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் புதிய தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர் செய்திகளை வெளியிட்டு வந்த செய்தியாளர் சஷிகாந்த் வாரிஷ் (படம்) என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அம்மாநிலத்தைச் சேர்ந்த செய்தியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதையடுத்து சிறப்புப் புலனாய்வுப் படையை அமைத்துள்ளது அம்மாநில அரசு.
மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி பகுதியைச் சேர்ந்தவர் செய்தியாளர் சஷிகாந்த் (48 வயது). 'மகாநகரி டைம்ஸ்' என்ற மராத்தி மொழி பத்திரிகையில், அப்பகுதி சார்ந்த பிரச்சினைகள் குறித்து செய்திகளை எழுதி வந்தார். குறிப்பாக தனியார் நிறுவனம் ஒன்று ரத்னகிரியில் அமைக்கத் திட்டமிட்டுள்ள புதிய தொழிற்சாலையால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து அவர் வெளியிட்ட செய்திகளுக்கு பொதுமக்கள் தரப்பில் ஆதரவு பெருகியது.
இதனால் அந்த தனியார் நிறுவனத்துக்கு நிலங்களை கையகப்படுத்திக் கொடுக்கும் பணியை மேற்கொண்டு வரும் நில விற்பனையாளர் பந்தாரிநாத் அம்பேர்கர் (42 வயது) கோபமடைந்தார். தனியார் நிறுவனத்துக்கு எதிராக செய்தி வெளியிட வேண்டாம் என அவர் சஷிகாந்தை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும், ஏற்கெனவே அவர் இதுபோன்ற பலருக்கு மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது.
எனினும் மிரட்டலையும் மீறி சஷிகாந்த் செய்திகளை வெளியிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, மகாராஷ்டிர முதல்வர் ஆகியோருடன் பந்தாரிநாத் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, 'பிரதமர், முதல்வருடன் குற்றவாளி' என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனால் ஆவேசமடைந்த பந்தாரிநாத், சஷிகாந்தை தீர்த்துக்கட்ட முடிவெடுத்துள்ளார். அதன்படி கடந்த 6ஆம் தேதி ரத்னகிரியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையம் அருகே சசிகாந்த் நின்றிருப்பதை அவர் கவனித்தார். பின்னர், தன் காரை வேகமாக ஓட்டிச்சென்று சசிகாந்த் மீது மோதியதுடன், காரின் அடியில் சிக்கிக்கொண்ட அவரை சில மீட்டர் தூரம் இழுத்துச் சென்றார்.
பின்னர் பந்தாரிநாத் அங்கிருந்து தப்பிச்சென்ற நிலையில், விபத்தை நேரில் கண்டவர்கள் சசிகாந்தை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மறுநாள் உயிரிழந்தார் சசிகாந்த்.
இதையடுத்து குற்றவாளியைக் கைது செய்ய வலியுறுத்தி மகாராஷ்டிர ஊடகவியலாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
பந்தாரிநாத் ஆளும் தரப்புக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுவதை மகாராஷ்டிர அரசுத் தரப்பு மறுத்துள்ளது. சட்டம் அதன் கடமையைச் செய்யும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.

