மும்பை: தலைநகர் டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி தொலைக்காட்சி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருவதாக நேற்று தகவல்கள் வெளியாகின. அத்துடன், பிபிசி அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களின் கைப்பேசிகள், மடிக்கணினிகள் ஆகியவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படத்தால் சர்ச்சை ஏற்பட்ட நிலையில், அந்தப் படம் தொடர்பான காணொளிகளை மத்திய அரசு முடக்கியது.
இந்நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அனைத்துலக வரிவிதிப்பு உள்ளிட்டவை குறித்து சோதனை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. அதேநேரத்தில் பிபிசி அலுவலகத்தின் கணக்கு வழக்கு புத்தகங்களைப் பரிசோதிக்கவே அதிகாரிகள் சென்றுள்ளதாகவும் இது சோதனை நடவடிக்கை அல்ல என்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் வட்டாரங்கள் கூறியுள்ளன.

