புதுடெல்லி: பிபிசி இந்தியா அலுவலகத்தில் மீண்டும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்
டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் இரண்டாவது நாளாக நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் அந்நிறுவனத்தின் நிதித் தரவு களையும் காகித ஆவணங்களையும் ஆய்வு செய்தனர் என்று அதிகாரிகள் கூறினர்.
கடந்த 2002-இல் நடந்த குஜராத் கலவரம் குறித்த ஆவணப் படத்தை பிபிசி அண்மையில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதில் பிரதமர் மோடிக்கு கலவரத்தில் தொடர்பு இருப்பதுபோல காட்டப்பட்டது.
இந்த நிலையில் பிபிசியின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை முதல் சோதனையை நடத்தினர்.
இரவு முழுவதும் நீடித்த சோதனை இரண்டாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது.
பிபிசியின் நிதி, இதர துறை களைச் சேர்ந்த ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்றது.
சோதனையின்போது பிபிசி செய்தியாளர்கள், ஊழியர்களின் கைப்பேசி, மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதற்கிடையே அனைத்துலக வரி விதிப்பு, பிபிசி துணை நிறுவனங்களின் பரிவர்த்தனை தொடர்பாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.
சோதனை குறித்து வருமான வரித் துறை அதிகாரபூர்வ அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை.
பிபிசி நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதாகவும் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
பிபிசி நிறுவனம் தனது ஊழியர்களுக்கு மின் அஞ்சல் வழியாக தகவல் ஒன்றை அனுப்பியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அதில், "ஒளிபரப்புத்துறை ஊழியர்களைத் தவிர மற்ற துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே வேலை செய்யவும் தனிப்பட்ட வருமானம் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் அளிப்பதை ஊழியர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிபிசிக்கு எதிரான சோதனைகளுக்கு பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜுன கார்கே, "மோடி ஆட்சியில் பத்திரிகை சுதந்திரத்தின் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது, விமர்சனக் குரல்களை நசுக்குவதற்காக வெட்கக்கேடான மற்றும் மன்னிக்க முடியாத பழிவாங்கலுடன் இது செய்யப்படுகிறது," என்று கூறியுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி சஞ்சய் சிங், "மோதி சர்வாதி காரம் உச்சக்கட்டத்தை அடைந்து இருப்பதாகத் தெரிவித்தார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், "அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித்துறை உள்ளிட்ட இந்திய அரசின் அமைப்புகள், அரசியல் கருவிகளாக அரசியல் எதிரிகளை குறிவைத்து தாக்க அளவு கடந்து பயன்படுத்தப்படுகின்றன," என்றார்.
"இந்தப் பட்டியலில் பிபிசி நிறுவனத்தில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையும் இணைந்துள்ளது," என்று அவர் மேலும் கூறினார்.
இந்த நிலையில் பிபிசி அலு வலகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளுக்கும் அரசுக்கும் தொடர்பு இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
"யாரும் சட்டத்திற்கு அப்பாற் பட்டவர்கள் இல்லை, இந்த ஆய்வு முடிந்தபிறகு அது குறித்த தகவல்கள் வெளியிடப்படும்," என்று இந்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சரான அனுராக் தாக்கூர் கூறியதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக் கின்றன.

