புதுடெல்லி: மராட்டிய மாநில பால்கார் மாவட்டத்தில் வாடகை வீட்டின் படுக்கைக்குக் கீழே அழுகிய நிலையில் இருந்த பெண் சடலத்தைக் காவல்துறை யினர் மீட்டுள்ளனர். நலசோப்ரா நகரில் விஜய் நகர், சீதா சதன் குடி யிருப்பில் உள்ள அந்த வீட்டிலிருந்து துர் நாற்றம் வீசுவதாகத் தகவல் வந்ததைத் தொடர்ந்து அவ்வீட்டைக் காவல்துறையினர் சோதனையிட்டனர். அப்போது பெண் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவரது பெயர் மேகா தனசிங் தோர்வி, 35 என்பது தெரிய வந்துள்ளது. இவர், தனது காதலர் ஹர்தீக் ஷா, 27 என்பவருடன் ‘லிவ்-இன்’ ஒன்றாக வசித்து வந்தார்.
இதற்கிடையே தப்பிச் செல்ல முயற்சி செய்த ஹர்தீக் ஷாவை காவலர்கள் கைது செய்து உள்ளனர். அவர் வேலையில்லாமல் இருந்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இது போன்று ஒருமுறை நடந்த சண்டையில் மேகாவை அவர் கொலை செய்திருக்கலாம் என்று காவல்துறையினர் கருதுகின்றனர். காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து இதனை விசாரித்து வருகின்றனர்.