2023 விண்வெளிக் கண்காட்சியில் இந்திய தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்து
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் 'விண்வெளிக் கண்காட்சி 2023' நடைபெற்று வருகிறது.அந்தக் கண்காட்சி நிகழ்வில் இந்தியாவில் தயார் செய்யப்பட்ட ராணுவத் தளவாடங்களை வாங்குவதற்குப் பல்வேறு நாடுகள் ஒப்பந்தம் மேற்கொண்டன.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், "பாதுகாப்புக்கான அனைத்துலக நிறுவனங்களுக்கு இணையாக இந்திய தற்காப்புத் துறை முன்னேறி வருவதை இந்த விண்வெளிக் கண்காட்சி பறைசாற்றுகிறது. இந்தக் கண்காட்சி நிகழ்வில் மேற்கொள்ளப்பட்ட விற்பனை மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்ற ஒப்பந்தங்கள் இந்திய தற்காப்புத் துறைக்கு புதிய துவக்கத்தை அளித்துள்ளன. இதன் மூலம் தற்சார்பு இந்தியாவின் புதிய யுகம் தொடங்கியுள்ளது," என்றார் அமைச்சர் ராஜ்நாத் சிங்.
"அடுத்த நிதி ஆண்டு முதல் ராணுவத்திற்கான தேவையில் 75% உள்நாட்டு உற்பத்தியாளர்களிடம் இருந்தே கொள்முதல் செய்யப்படும். உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது," என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், "அடுத்த 25 ஆண்டுகளில் மிகப் பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுக்க வேண்டும் என்பதும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் உலகின் முன்னணி நாடாக வேண்டும் என்பதும்தான் இந்தியாவின் இலக்கு. எனவே, பழைய அணுகுமுறைகளில் இருந்து மாறி புதிய கண்டுபிடிப்புகளின் துணையுடன் நாம் வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டும்," என அவர் வலியுறுத்தினார்.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் உள்பட பல்வேறு ராணுவத் தளவாட உற்பத்தி நிறுவனங்கள் இடையே 201 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
"உள்ளூர் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், உள்நாட்டு ராணுவ உற்பத்தித் தளவாடக் கொள்முதலுக்காக வரவுசெலவுத் திட்டத்தில் நூறாயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது," என்று தெரிவித்தார்.
"இயன்றவரை நாட்டுக்குத் தேவையான ராணுவத் தளவாடங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யவும், இறக்குமதியைக் குறைத்து, தற்காப்புத்துறையை மேலும் வலுப்படுத்துவதற்கு எப்போதும் இல்லாத வகையில் இந்த வரவுசெலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
"ராணுவத் தளவாட உற்பத்தியில் தன்னிறைவு அடைவதன் மூலம் நமது பொருளாதாரமும் வலுவடையும். அதற்காக, ராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்ய உள்நாட்டு நிறுவனங்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நமது நாட்டின் தேவையைப் பூர்த்தி செய்வதுடன் இந்தியாவின் நட்பு நாடுகளின் ராணுவத் தேவைகளையும் பூர்த்தி செய்யமுடியும் என்றார் அமைச்சர் ராஜ்நாத் சிங்.

