தேசிய பழங்குடியின திருவிழா
புதுடெல்லி: நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் பங்காற்றிய பழங்குடி மக்களைக் கௌரவிக்கும் வகையில் நேற்று மகா தேசிய பழங்குடியின திருவிழா தொடங்கப்பட்டது. டெல்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் தேசிய அரங்கத்தில் இந்த விழா தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பழங்குடி கலாசாரம், கைவினைப் பொருள்கள், உணவுப் பொருள்கள், வர்த்தகம் மற்றும் பாரம்பரிய கலை ஆகியவை காட்சிப்படுத்தப்பட உள்ளன. இந்நிகழ்ச்சியானது மத்திய பழங்குடியின விவகாரங்களுக்கான அமைச்சகம் சார்பில் நேற்று தொடங்கி பிப்ரவரி 27ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. நிகழ்ச்சியில் 200 கடைகள் அமைக்கப்படும். இந்த திருவிழா நிகழ்வில் ஆயிரக்கணக்கான பழங்குடியினக் கலைஞர்கள் பங்குபெற்று நிகழ்ச்சி படைப்பர்.
மாநிலங்கள் சம்மதித்தால் பெட்ரோலிய பொருள்களின் விலையை குறைக்கலாம்
புதுடெல்லி: பெட்ரோலியப் பொருள்கள், மதுபானம் போன்ற சில பொருள்கள் இன்னும் பொருள் சேவை வரி வரம்புக்குள் கொண்டுவரப்படவில்லை. முன்பு போலவே, உற்பத்தி வரி, உபரி வரி உள்ளிட்ட வரிகள்தான் விதிக்கப்பட்டு வருகின்றன. பெட்ரோலியப் பொருள்களின் விலையைக் குறைக்க அவற்றை பொருள் சேவை வரி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை பலதரப்பினரும் மத்திய அரசுக்கு வலியுறுத்தி வருகின்றனர். இதற்குப் பதிலளித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் "மாநில அரசுகள் சம்மதம் தெரிவித்தால், பெட்ரோலியப் பொருள்களை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர முடியும். மின்சாரம் உள்ளிட்ட துறைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளை வலியுறுத்தியும் 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தை அமல்படுத்துமாறும் கூறி வருகிறோம்," என்று கூறியுள்ளார்.
திருமண நாடகம்: நகைகளுடன்
ஓட்டம் பிடித்த மணமகள்
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் பகுதியில் வசிக்கும் குடியா என்ற பெண்ணுக்கும் ராஜஸ்தான் மாநிலத்தின் அஜ்மீரில் வசிக்கும் அங்கித் என்ற ஆடவருக்கும் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தின் சந்தவுலி மாவட்டத்தில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததும் மாப்பிள்ளையின் சொந்த ஊரான அஜ்மீருக்கு ரயிலில் பயணம் செய்தனர். ரயிலில் ஆட்டம் பாட்டம் என மகிழ்ச்சியாக பயணம் செய்வதர்களுக்கு பெண்ணின் தோழி ஒருவர், மயக்க மருந்து கலந்த உணவு பரிமாறினாள். அனைவரும் மயக்கநிலையில் இருந்தபோது, அவர்களிடம் இருந்து பணம், நகைகளைச் சுருட்டிக்கொண்டு பெண் வீட்டார் ரயிலில் இருந்து தப்பி ஓடினர். நினைவு திரும்பியதும் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அதிர்ச்சி அடைந்த மாப்பிள்ளை வீட்டார் காவல்துறையிடம் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர், மணப்பெண் குடியா மற்றும் உடந்தையாக இருந்த அவரது தோழி ஆகியோரை வாரணாசியில் கைது செய்தனர்.
என்.டி.ராமாராவ் உருவம் பொறித்த
ரூ.100 வெள்ளி நாணயம்
ஹைதராபாத்: மறைந்த நடிகரும் தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான என்.டி.ராமாராவின் நூற்றாண்டையொட்டி, விரைவில் அவரது உருவப்படம் பொறித்த ரூ.100 வெள்ளி நாணயத்தை மத்திய அரசு வெளியிட உள்ளது.
என்.டி. ராமாராவ் திரைப்படத் துறையில் கால்பதித்து பல்வேறு சாதனைகளைப் படைத்தவர். பின்னர், 1982ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் எனும் கட்சியைத் தொடங்கி, வெறும் 9 மாதங்களில் சூறாவளிச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஆட்சியைப் பிடித்து கின்னஸ் சாதனை புரிந்தார். 1983ஆம் ஆண்டு முதல் 1994ஆம் ஆண்டு வரை ஆந்திர மாநிலத்தில் தொடர்ந்து மூன்று முறை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சியை நடத்திய என்.டி.ராமாராவ் பல நல்ல திட்டங்களை அமல்படுத்தினார்.

