புதுடெல்லி: கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) சரிபார்ப்பு தொடர்பாக தொடங்கப்பட்டுள்ள இணையச் சேவைத் திட்டம் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை பெருமளவு குறைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லி காவல்துறை தொடங்கப்பட்டு 76 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், கடவுச் சீட்டு சரிபார்த்தல் தொடர்பான இணையச் சேவைகளையும் டெல்லியில் நடமாடும் தடயவியல் வாகனங்களையும் அவர் தொடங்கிவைத்தார்.
அத்துடன், தேசிய தடயவியல் அறிவியல் வளாகத்தையும் திறந்துவைத்தார்.
இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் அமித்ஷா, "தற்போதைய நடைமுறை மூலம் கடவுச்சீட்டு சரிபார்த்தல் முறை 15 நாள்களுக்குப் பதிலாக ஐந்து நாள்களில் நிறைவுபெறும்," எனத் தெரிவித்தார்.
"கடவுச்சீட்டு பெறுவதற்கான விண்ணப்பங்கள் நாளொன்றுக்கு சராசரியாக 2,000 வரை அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், இந்தச் சேவை மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளைப் பெருமளவு குறைக்கும்," என்றார்.
இந்திய தண்டனைச் சட்டம், குற்ற விசாரணை முறைச் சட்டம், ஆதார் ஆவணச் சட்டம் போன்றவற்றில் மத்திய அரசு மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வர உள்ளதாகவும் அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.
டெல்லியில் ஜி20 மாநாட்டு நிகழ்ச்சிகளுக்கு அனைத்துலக பிரதிநிதிகள் வருவதால், காவலர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

