மும்பை: பிபிசி ெசய்தி நிறுவனத்தின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை 60 மணி நேரத்திற்குப் பிறகு நிறை வடைந்தது.
லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிபிசி செய்தி நிறுவனத்தின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை முதல் வருமான வரித்துறை சோதனை தொடங்கியது.
அலுவலகத்தில் நுழைந்ததுமே அங்கிருந்த ஊழியர்களின் கைப்பேசிகள், மடிக்கணினிகளைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை ஆய்வு செய்தனர்.
அதனைத்தொடர்ந்து பிபிசி அலுவலகத்தின் பணப் பரிவர்த்தனைகள் குறித்த மின்னணு, காகித ஆவணங்களை அவர்கள் சேகரித்தனர்.
அனைத்துலக வரிவிதிப்பு, துணை நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்தது தொடர்பாக வருமான வரித் துறையினர் விசாரணை நடத்தினர்.
ஏறத்தாழ 60 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனை வியாழக்கிழமை நள்ளிரவில் நிறைவடைந்தது.
எனினும், வருமான வரித்துறை சார்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
கடந்த 2002ல் குஜராத் கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர அப்போதைய குஜராத் மாநில முதல்வரும் இப்போதைய பிரதமருமான நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்கவில்லை என பிபிசி வெளியிட்ட ஆவணப் படமே இந்தச் சோதனைகளுக்கு முக்கிய காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
"கருத்து சுதந்திரத்தைப் பாதிக்கும் செயல்," என பல்வேறு தரப்பினரும் மத்திய பாஜக அரசுக்குக் கண்டனம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே பிபிசி நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில், "மூன்று நாள் சோதனையில் சில பணியாளா்கள் இரவும் பகலும் அலுவலகத்தில் தங்கியிருக்க நேரிட்டது. யாருக்கும் அஞ்சாமலும் யாருக்கும் ஆதரவு தராமலும் தொடா்ந்து செய்திகள் வழங்கப்படும்," என்று தெரிவித்துள்ளது.

