ரூ.7,614 கோடி முதலீடு செய்கிறது 'ஓலா' நிறுவனம்
சென்னை: மின்வாகன உற்பத்தி, மின்கலன் உற்பத்தி ஆகியவற்றுக்கான தொழிற்சாலைகளை அமைப்பதன் தொடர்பில் 'ஓலா எலெக்ட்ரிக் மொபிலிட்டி' நிறுவனத்துடன் தமிழக அரசாங்கம் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் 7,614 கோடி ரூபாய் முதலீட்டில் இந்த ஆலைகளை ஓலா நிறுவனம் அமைக்க உள்ளது.
இதன் மூலம் 3,000க்கு மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தை இந்தியாவின் மின்வாகனத் தலைநகராக நிலைப்படுத்தும் முயற்சிகளை மாநில அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.
சில நாள்களுக்கு முன்பாக மின்வாகனத் தொழிற்சாலைகள் தொடர்பில் 50,000 கோடி ரூபாய் வரையிலான முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பான மின்வாகனக் கொள்கையை தமிழக அரசாங்கம் அறிவித்தது. இதன் மூலம் மாநிலத்தில் 150,000 வேலை வாய்ப்புகளை உருவாக்குவது அதன் இலக்கு.
இவ்வேளையில் ஓலா நிறுவனத்துடனான புரிந்துணர்வுக் குறிப்புகள் கையெழுத்தாகி இருக்கின்றன.
ஓலா எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்தின் துணை நிறுவனங்களான ஓலா செல் டெக்னாலஜிஸ், ஓலா எலெக்ட்ரிக் டெக்னாலஜிஸ் இரண்டும் முதலீடு செய்கின்றன.
அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஓலா செல் டெக்னாலஜிஸ் ரூ.5,114 கோடியும் ஓலா எலெக்ட்ரிக் டெக்னாலஜிஸ் ரூ.2,500 கோடியும் முதலீடு செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தொழிற்சாலைகளின் மூலம் 20 கிகாவாட் மின்கலன் உற்பத்தி செய்யப்படுவதுடன் ஆண்டுக்கு 140,000 மின்கார்கள் உற்பத்தி செய்யப்படும் எனக் கூறப்பட்டது. முதலீட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதோடு தமிழ்நாட்டில் மின்வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டுவருகிறது.
மின்வாகனங்களுக்கு சாலை வரியிலிருந்து முழு விலக்கு தருவதும் இவற்றில் அடங்கும்.
ஏத்தர் எலெக்ட்ரிக், ஓலா எலெக்ட்ரிக் போன்ற நிறுவனங்கள் தொழிற்சாலைகளை அமைக்கும் நிலையில், தமிழ்நாடு மின்வாகன உற்பத்தி நடுவமாக உருமாற்றம் கண்டுள்ளது.

