செங்கல்பட்டு: இந்தியாவின் முதல் 'ஹைபிரிட்' வகை ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 150 சிறிய ரக செயற்கைக் கோள்களை இந்த ராக்கெட் சுமந்து சென்றது. இந்த செயற்கைக்கோள்களைத் தயாரிக்கும் குழுவில் 3,500 அரசுப் பள்ளி மாணவர்கள் இடம்பெற்றிருந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பட்டிப்புலம் கிராமத்தில் இருந்து இந்த ராக்கெட் ஏவப்பட்டது என்றும் எந்தச் சிக்கலும் இன்றி இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது என்றும் நிபுணர்கள் தெரிவித்தனர்.
'ஹைபிரிட்' வகை ராக்கெட் குறைந்த உயரத்தில் பறக்கக் கூடியவை. செயற்கைக்கோள்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும் அவை தொடர்பான தரவுகளைச் சேகரிக்கவும் இந்த ராக்கெட்டுகள் பயன்படுகின்றன.
"நாடு முழுவதும் உள்ள 20 மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் செயற்கைக்கோள்களை உருவாக்கும் திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டது இதுவே முதல் முறை.
"இதன் மூலம் கிடைத்த அனுபவம் மாணவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு நல்ல தூண்டுகோலாக அமையும்," என்று 'ஹைபிரிட்' ராக்கெட் திட்டத்தில் பங்கேற்ற நிபுணர்கள் தெரிவித்தனர்.

