கியோன்ஞார்: ஒடிஷா மாநிலத்தின் கியோன்ஞாரில் புஹுயான் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒரு பெண் 11வது குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு கருத்தடை செய்து கொண்டார்.
இதனால் ஆவேசமடைந்த கணவர் அவரை குழந்தைகளுடன் துரத்தியடித்துவிட்டார்.
பச்சிளம் குழந்தைகளுடன் ஜானகி என்ற அந்தப் பெண் மரத்தடியில் இருப்பதைக் கண்ட 'ஆஷா' எனும் சமூக சேவை அமைப்பைச் சேர்ந்தவர்கள் சனிக்கிழமை அன்று அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். ஜானகியும் குழந்தைகளும் மூன்று நாட்களாக மரத்தடியில் இருந்துள்ளனர்.
இது பற்றி அவரது கணவர் டெஹிரியிடம், 40, கேட்டபோது கருத்தடை செய்தால் பாரம்பரிய சடங்குகளில் தனது மனைவி பங்கேற்க முடியாது என்றார்.
ஜானகிக்கு ஜனவரி 19ஆம் தேதி குழந்தை பிறந்தது. இதன் பிறகு ஆஷா சமூக சேவகர்கள் அறிவுறுத்தியதால் அவர் பிப்ரவரி 14ஆம் தேதி டெல்கோய் மருத்துவமனையில் கருத்தடை செய்துகொண்டார்.
நாள் கூலி செய்துவரும் டெஹிக்கும் ஜானகிக்கும் 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு 11 குழந்தைகள் இருக்கின்றன.
ஐந்து ஆண் குழந்தைகள், ஆறு பெண் குழந்தைகள். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை இறந்துவிட்டது.
ஜானகிக்கு மறுவாழ்வு அளிக்க ஏற்பாடு செய்யப்படும். பல முறை முயற்சி செய்தும் அவரது கணவர் கருத்தடைக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்று 'ஆஷா' அமைப்பின் பிஜே லக்ஷ்மி சாஹு தெரிவித்தார்.
இந்த நிலையில் 'ஆஷா' ஊழியர்கள் தனது சம்மதமின்றி மனைவிக்கு கருத்தடை செய்துவிட்டதாக புகார் தெரிவித்துள்ளார்.
ஆனால் அடிக்கடி கர்ப்ப மடைவதால் தாயாரின் உயிருக்கே ஆபத்து ஏற்படுகிறது என்று அவ்வட்டார மருத்துவர்கள் கூறி யுள்ளனர்.

