புதுடெல்லி: இன்னமும் திருமணம் செய்துகொள்ளாமல் ஒற்றையராக இருப்பதற்குக் காரணம் என்ன என்று ராகுல் காந்தியிடம் கேட்டதற்கு, அதற்கான காரணம் தெரியவில்லை என்று கூறிஉள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் நாடாளு மன்ற உறுப்பினரான ராகுல், இத்தாலிய நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனது நீண்ட நடைப்பயணம், திருமணம், நாடாளுமன்றத் தேர்தல் உள்ளிட்ட கேள்விகளுக்கு சுவைபட பதிலளித்துள்ளார்.
"உங்களுக்கு 52 வயதாகிறது. இன்னமும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறீர்களே," என்று அவரிடம் கேட்கப்பட்டதற்கு, "விசித்திரமாகத்தான் இருக்கிறது. திருமணம் செய்யாமல் இருப்பதற்கான காரணம் தெரியவில்லை. செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன. ஆனால் எனக்கு நிறைய குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது," என்று பதிலளித்துள்ளார்.
தாடியைப் பற்றி கேட்டதற்கு, "நடைப் பயணம் முழுவதும் தாடியை எடுப்பதில்லை என்று முடிவு செய்திருந்தேன். இப்போது அதை தொடர்ந்து வைத்துக்கொள்வதா அல்லது வேண்டாமா என்று நான் முடிவு செய்ய வேண்டும்," என்றார்.
"அடுத்த தேர்தலில் மோடியைத் தோற்கடிக்க முடியும் என்பதை உறுதியாகக் கூற முடியாது. ஆனால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் 100 விழுக்காடு அவரைத் தோற்கடிக்க முடியும். நான் இந்திய பாட்டியான இந்திராவின் செல்லம். அவருக்கு என்னை ரொம்பப் பிடிக்கும்.
"இத்தாலியப் பாட்டியான பவுலோ மைனோவுக்கு (சோனியா காந்தியின் தாயார்) பிரியங்காவைப் பிடிக்கும். இத்தாலி பாட்டி 98 வயது வரை வாழ்ந்தார். அவர் மீது எனக்கு மிகுந்த பற்று உண்டு," என்று ராகுல் கூறினார்.

