கேந்திரபாரா: மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், அவர் பிறந்த சிற்றூரில் ரூ.7 கோடி (S$1.152 மில்லியன்) செலவில் கோவில் கட்டியுள்ளார் இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர்.
கேத்ரபாஷி லெங்கா, 62, என்ற அந்தத் தொழிலதிபரும் வைஜெயந்தி லெங்கா, 56, என்ற அவரின் மனைவியும் தெலுங்கானா மாநிலம், ஹைத ராபாத்தில் வசிக்கின்றனர்.
ஒடிசாவின் சிக்னா எனும் சிற்றூரில் பிறந்த திருவாட்டி வைஜெயந்தி, குழந்தைப் பருவத்திலிருந்தே சந்தோஷி மாதாவின் தீவிர பக்தை.
"என் மனைவி, அவர் பிறந்த ஊரிலிருக்கும் ஒரு கோவிலில் சந்தோஷி மாதாவை வழிபடுவது போன்று கனவு கண்டார். அதனைத் தொடர்ந்து, என் மாமனாரின் ஊரில் ஒன்றரை ஏக்கரில் ஒரு கோவில் கட்டியுள்ளேன். 2008ஆம் ஆண்டில் தொடங்கிய கட்டுமானப் பணிகள் அண்மையில்தான் முடிவடைந்தன," என்றார் திரு கேத்ரபாஷி.
திருவாட்டி வைஜெயந்தி விருப்பப்பட்டபடி தென்னிந்தியக் கட்டடக் கலை வடிவமைப்புடன் அக்கோயில் கட்டப்பட்டுள்ளது. சிவன், பிள்ளையார், அனுமார், நவக்கிரகங்கள் ஆகிய கடவுள்களையும் அக்கோவிலில் வழிபடலாம் என்று திரு கேத்ரபாஷி குறிப்பிட்டார்.
இத்தம்பதிக்கு மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றும் ஒரு மகனும் மருத்துவராக இருக்கும் ஒரு மகளும் உள்ளனர்.
கோவில் கட்டி, தங்கள் தாயாரின் விருப்பத்தை நிறைவேற்றும்படி இருவருமே தம்மை ஊக்குவித்ததாக திரு கேத்ரபாஷி கூறினார்.
தங்கள் ஊருக்கு கோவில் வந்ததால் சிக்னாவாசிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மனைவிக்காக கேத்ரபாஷி லெங்கா கட்டியுள்ள சந்தோஷி மாதா கோவில். படம்: இந்திய ஊடகம்

