புதுடெல்லி: மகாராஷ்டிரா மாநிலத்தின் சந்திராப்பூர், யவத்மால் மாவட்டங்களை இணைக்கும் நெடுஞ்சாலையில், மூங்கிலால் சாலைத் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. உலகிலேயே முதல்முறையாக இத்தகைய சாலைத் தடுப்பு அமைக்கப்பட்டிருக்கிறது.
மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி டுவிட்டரில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
வாணி-வரோரா நெடுஞ்சாலையில் 200 மீட்டர் தொலைவிற்கு அமைந்துள்ள இந்த மூங்கில் சாலைத் தடுப்பிற்கு 'பாகுபலி' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தூரில் உள்ள தேசிய வாகன சோதனைத் தளம் உள்ளிட்ட அரசாங்க அமைப்புகளில் இது தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.
ரூர்க்கி மத்திய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட தீத் தடுப்பு சோதனையில் மூங்கில் சாலைத் தடுப்பு முதல் தரம் பெற்றுள்ளது.
பொதுவாக, சாலைத் தடுப்புகளை இரும்பில் அமைப்பது வழக்கம். அவற்றின் மறுபயனீட்டு விகிதம் 30 முதல் 50 விழுக்காடு மட்டுமே. ஆனால் மூங்கில் தடுப்புகளுக்கு இந்த விகிதம் 50 முதல் 70 விழுக்காடு.
"சாலைத் தடுப்புக்கு 'பம்புசா பால்கோ' என்ற மூங்கில் வகை பயன்படுத்தப்படுகிறது. இதன் மீது மறுபயனீடு செய்யப்பட்ட, அதிக அடர்த்தியுடன் கூடிய பாலி எத்திலின் பூசப்பட்டுள்ளது.
"மூங்கில் துறைக்கும், இந்தியாவுக்கும் இது குறிப்பிடத்தக்க சாதனை. இரும்புத் தடுப்புகளுக்கு சரியான மாற்றாக விளங்கும் மூங்கில் தடுப்புகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லை. இது ஊரக, வேளாண் தொழிலுக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது," என்று அமைச்சர் கட்காரி கூறியிருக்கிறார்.

