புதுடெல்லி: துபாயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறிய மோசடிப் பேர்வழிகளை நம்பிச் சென்று லிபியாவில் சிக்கித் தவித்த பஞ்சாப்பை சேர்ந்த
12 இளையர்களை இந்திய வெளியுறவுத் துறை மீட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
லிபியாவில் அவர்கள் கொத்தடிமை போல வேலை செய்துவந்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த அவர்களின் உறவினர்கள் தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தில் புகார் செய்தனர். இதையடுத்து அந்த ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்து அந்த 12 பேரையும் மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளது. இதுபற்றி கூறிய அந்த ஆணையத் தலைவர் இக்பால் சிங், "பஞ்சாப்பை சேர்ந்த 12 பேரிடம் ஆசை வார்த்தை கூறி துபாய்க்கு அழைத்துச் செல்வதாக சிலர் தெரிவித்துள்ளனர். அதை நம்பிப் பணத்தைச் செலுத்தி இவர்கள் சென்றுள்ளனர். ஆனால் அந்த மோசடிப் பேர்வழிகள் அவர்களை துபாய் வழியாக லிபியாவுக்கு அழைத்துச்சென்று அங்கு கொத்தடிமைகளாக விற்றுவிட்டுத் தப்பிவிட்டனர்," என்று கூறினார்.

