புதுடெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பில் தெலுங்கானா முதல்வரான சந்திரசேகர ராவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அவரது மகள் எம்எல்சியான கவிதாவுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கவிதாவுக்குத் தொடர்பு இருப்பதாக அமலாக்கப் பிரிவு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களுக்கு ரூ.100 கோடி நன்கொடை வழங்கிய 'சவுத் குரூப் இன்டோஸ்பிரிட்ஸ்' நிறுவனத்தில் கவிதா சார்பில் அருண் பங்குதாரராக உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், மதுபானக் கொள்கை முறைகேடு மூலம் கிடைத்த வருமானம் ரூ.296 கோடியாக இருக்கலாம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதில் ஒரு பகுதி அருண் ராமச்சந்திர பிள்ளைக்காக அசையும் மற்றும் அசையாப் பொருட்கள் வாங்குவதற்கு பயன்படுத்தப் பட்டதாக நம்பப்படுகிறது.
டெல்லியில் உள்ள அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் சென்ற திங்கள்கிழமை அருண் ராமச்சந்திர பிள்ளையிடம் அதிகாரிகள் நீண்டநேரம் விசாரணை நடத்தி இரவில் அவரை கைது செய்தனர்.
மறுநாள் செவ்வாய்க்கிழமை சிபிஐ அதிகாரிகள் அவரை டெல்லியின் ரோஸ் அவென்யூவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
அப்போது கவிதாவின் பினாமியாக அருண் ராமச்சந்திர பிள்ளை இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் அவரிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்த ஒரு வாரம் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்த விசாரணையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் பல குற்றச்சாட்டுகளை அறிக்கையாக முன்வைத்தனர்.
டெல்லி மதுபான வழக்கில் சரத் சந்திர ரெட்டி, மகுண்ட சீனி வாசலு ரெட்டி, மகுண்ட ராகவ், எம்.எல்.சி. கே. அருண் ராமச்சந்திர பிள்ளை, எம்.எல்.சி. கவிதா ஆகியோர் முக்கிய நபர்கள் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அருண் ராமச்சந்திர பிள்ளை, அபிஷேக் போயின்பள்ளி, புச்சிபாபு ஆகியோர் வெளியில் தரகர்களாகச் செயல்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கவிதா டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை முன்னிலையாக அழைப்பாணை அனுப்பப்பட்டது. இந்தச் சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள முன்னாள் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்ற கைதிகளுடன் அடைக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ் குற்றம் சாட்டிஉள்ளார்.
மதுபானக் கொள்கை முறைகேட்டு வழக்கு; சந்திரசேகர ராவுக்கு நெருக்கடி

