புதுடெல்லி: இந்தியாவில் கடுமையான இருமல், சளி, காய்ச்சல் நோய்த் தொற்று அதிகரித்து வருகிறது. இருந்தாலும் உரிய சிகிச்சையை மேற்கொண்டால் ஆறு நாட்களில் குணமடைந்துவிடலாம் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஃபுளூ காய்ச்சல் நுரையீரலைப் பாதிக்கக்கூடியது. இரண்டு முதல் 6 நாட்கள் வரை காய்ச்சல் நீடிக்கும். சளி, உடல் வலி, தலைவலி, இருமல், தொண்டை கர கரப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை பாதிப்பு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஆனால் குழந்தைகளுக்கு நிமோனியா எனப்படும் உடலில் நீர் இழப்பு மற்றும் நீர் பற்றாக்குறை அதிகமாக ஏற்பட்டால் காய்ச்சல் வந்தவுடன் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது அவசியம். புளூ காய்ச்சலுடன் எச்1என்1 என்னும் ஒருவகை இன்புளூயென்சா வைரஸ் கிருமித்தொற்று தற்போது அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதும் காய்ச்சல் மற்றும் சுவாச நோய்த்தொற்றுகளின் அதிகரிப்பு காரணமாக நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள், இருமல் மருந்துகள் மற்றும் தொற்று எதிர்ப்பு மருந்துகளின் விற்பனை வேகமெடுத்துள்ளது.
காய்ச்சல் மருந்துகளான பாராசிட்டமால், அசித்ரோமைசின், இருமல் மருந்து விற்பனை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. கடந்த மாதம் மருந்து களின் விற்பனை 20 முதல் 25 விழுக்காடு அளவுக்கு அதிகரித்தது.


