எளிதில் ஊடுருவ இயலும் என மத்திய உளவு அமைப்புகள் எச்சரிக்கை
புதுடெல்லி: இந்திய ராணுவ வீரர்களும் அவர்தம் குடும்பத்தாரும்்்் சீனாவில் தயாரிக்கப்பட்ட கைப்பேசிகளைப் பயன்படுத்தக் கூடாது என இந்திய பாதுகாப்புத்துறையும் உளவு அமைப்புகளும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவில் தயாரிக்கப்படும் கைப்பேசிக் கருவிகளில் மூன்றாம் தரப்பினரால் எளிதில் ஊடுருவ முடியும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் என்றும் அதையடுத்தே ராணுவத்தினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவில் தயாரிக்கப்படும் கண்காணிப்புக் கருவிகள், கைப்பேசிகளின் நம்பகத்தன்மை குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
இதுகுறித்து அருணாச்சல பிரதேச மாநில எம்எல்ஏவான நைனோங் எரிங் அண்மையில் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார்.
அதில், இந்தியச் சந்தையில் மிகக் குறைந்த விலைக்கு விற்கப்படும் கைப்பேசிகளால் இந்தியாவுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
சீனாவில் தயாரிக்கப்படும் கண்காணிப்புக் கருவிகளை இந்திய நிறுவனங்களும் தனி நபர்களும் அதிக அளவில் பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ள நைனோங், இந்தக் கண்காணிப்புக் கருவிகள் சீனாவுக்கான காதுகளாகவும் கண்களாகவும் செயல்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
"இந்திய நிறுவனங்களை குறிவைக்கும் இணைய ஊடுருவல்காரர்களுக்கு இவை உதவிகரமாக உள்ளன. இது தொடர்பாக அமெரிக்க இணையப் பாதுகாப்பு நிறுவனங்கள் விடுத்திருக்கும் எச்சரிக்கையைப் புறக்கணிக்கக் கூடாது," என்கிறார் நைனோங்.
இந்நிலையில், பல்வேறு வகையான சீன கைப்பேசிக் கருவிகள் குறித்து ராணுவப் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என உளவுத்துறை மத்திய அரசுக்கு அறிவுறுத்தி உள்ளதாகத் தெரிகிறது.
நாடு முழுவதும் ஏறத்தாழ 20 லட்சம் சீன கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவற்றைப் பயன்படுத்த மத்திய அரசு தடைவிதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
இந்நிலையில், இந்திய ராணுவத்தின் முப்படைகளில் பணியாற்றி வரும் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் சீன கைப்பேசிகளைப் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சின் உளவுப்பிரிவு ராணுவ நிர்வாகத்துக்கு அறிவுறுத்தி இருப்பதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
சீன கைப்பேசிகளைப் பயன்படுத்துவதால் பாதுகாப்பு பிரச்சினை ஏற்படக்கூடும் என்றும் சீன கைப்பேசிகளில் உளவு பார்க்கும் தொழில்நுட்பம் இருப்பதாகச் சந்தேகம் எழுந்துள்ளது என்றும் உளவுப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே டிக்டாக் உள்ளிட்ட சீனாவின் கைப்பேசி செயலிகள் பலவற்றை இந்தியா தடை செய்துள்ளது. தற்போது கைப்பேசி கருவிகளையும் பயன்படுத்த வேண்டாம் என அறிவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், சீனாவுடன் நெருங்கிய தொடர்புடைய பிற நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களின் கைப்பேசி செயலிகளுக்கும் இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

