பல மணி நேர விசாரணையால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி மனைவியை மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.
புதுடெல்லி: நிலமோசடி வழக்கில் லாலு பிரசாத் யாதவின் மகனும், பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவுக்கு சிபிஐ இரண்டாவது முறையாக நேற்று சம்மன் அனுப்பியது.
ஆனால் அவர் முன்னிலையாக வில்லை.
மத்திய அரசாங்கத்தில் ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் யாதவ் இருந்தபோது, ரயில்வேயில் வேலை வழங்கும் விவகாரத்தில் முறைகேடுகள் நடந்ததாக புலனாய்வு அமைப்புகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, வேலை பெற்றவர்கள் தங்களின் நிலங்களைப் பரிசாக அல்லது குறைந்த விலைக்கு லாலுவின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பினாமிகளின் பெயர் களுக்கு எழுதித் தந்திருப்பதாகவும் இதன் மூலம் பல கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பில் லாலு பிரசாத் யாதவும் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
அண்மையில் பாட்னா மற்றும் டெல்லியில் உள்ள லாலு பிரசாத் யாதவின் வீடு உள்ளிட்ட 24 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவின் டெல்லி வீட்டிலும் இந்தச் சோதனை நடந்தது. இதில் ரூ. 53 லட்சம் ரொக்கம், 540 கிராம் தங்கம், 1.5 கிலோ தங்க நகைகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியானது.
இந்த நிலையில், தேஜஸ்வி யாதவிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ள சிபிஐ, அவருக்கு கடந்த மாதம் 4ஆம் தேதி அழைப் பாணை அனுப்பியது. ஆனால் விசாரணைக்கு தேஜஸ்வி யாதவ் முன்னிலையாகவில்லை. இதனால் சிபிஐ நேற்று மீண்டும் அவருக்கு அழைப்பாணை அனுப்பியது.
ஆனால் அவரது கர்ப்பிணி மனைவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதால் இம்முறையும் முன்னிலையாக முடியாது என்று தேஜஸ்வி யாதவ் சிபிஐயிடம் தெரிவித்துள்ளதாகக் கூறப் படுகிறது.
அமலாக்கத் துறையின் சோதனைக்குப் பிறகு தேஜஸ்வி யாதவின் மனைவி நேற்று முன்தினம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் பல மணி நேர விசாரணையால் உயர் ரத்த அழுத்தத்தால் அவர் பாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

