புதுடெல்லி: இந்தியாவில் கிருமிக் காய்ச்சல் அதிவேகமாகப் பரவி வருகிறது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஆய்வகங்களில் நடந்த பரிசோதனையில் 3,038 பேருக்கு இன்புளூயன்சா காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எச்3என்2 கிருமி உள்ளிட்ட சில வகை கிருமி நோய்களும் உறுதி செய்யப்பட்டு உள்ளன. கடந்த ஜனவரியில் 1,245 பேருக்கும் பிப்ரவரியில் 1,307 பேருக்கும் இம்மாதம் 9ஆம் தேதி வரை 486 பேருக்கும் கிருமி உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் சாதாரண பருவநிலை காய்ச்சலாக இருந்தாலும் புதிய வகை கிருமி தாக்கம் குழந்தைகளையும் முதியவர்களையும் உயிரிழக்கும் நிலைக்குக் கொண்டு செல்கிறது. இந்த காய்ச்சலுக்கு கர்நாடகா, அரியானா மாநிலங்களில் தலா ஒருவர் என இரண்டு பேர் இறந்துவிட்டனர். இதற்கிடையே அனைத்து மாநிலங்களையும் மத்திய சுகாதார அமைச்சு விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. "ஆண்டுதோறும் ஜனவரி முதல் மார்ச் வரையிலும் அதன் பிறகு மற்றொரு பகுதியாகவும் பருவகால கிருமி காய்ச்சல் இரண்டு கட்டங்களாகப் பரவுகிறது. தற்போது பரவும் எச்3என்2 கிருமி காய்ச்சல் இம்மாத இறுதியில் குறையத் தொடங்கும். எச்3என்2 கிருமி தவிர எச்1என்1 கிருமிப் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. இது மிக அதிகமாக தமிழ்நாட்டில் பரவியிருக்கிறது. இதுவரை 545 பேருக்கு இவ்வகை கிருமிப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் 170 பேர், குஜராத்தில் 74 பேர், கேரளாவில் 42 பேர், பஞ்சாப்பில் 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எச்1என்1 காய்ச்சலுக்கு 'ஆசெல்டாமிவிர்' (Oseltamivir) என்ற மருந்தை உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது. இதே மருந்தை எச்3என்2 காய்ச்சலுக்கும் கொடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த மருந்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது," என்று சுகாதாரத் துறை அறிக்கை குறிப்பிட்டது.


