போபால்: மனைவி பிரிந்ததால் ஆத்திரமடைந்த ஒருவர், தன் மனைவி மீதுள்ள கோபத்தை மாமியார்மீது காட்டியுள்ளார். மகளுக்கும் மருமகனுக்கும் இடையிலான சண்டையை தீர்த்துவிடச் சென்ற மாமியாரின் மூக்கை மருமகன் அறுத்துவிட்டதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
மத்தியப்பிரதேச மாநிலம், மோர்னியா மாவட்டம், சந்தப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ரஹ்மத் பகேல், ராம் விலாசி தம்பதியர். இவர்களது மகள் ஷியாம் சுந்தரிைய பக்கத்து ஊரில் வசிக்கும் ராஜு பாகேல் என்பவர் அண்மையில் திருமணம் செய்துகொண்டார்.
மருமகன் ராஜு பாகேல் தன் மனைவி ஷியாம் சுந்தரியை அடிப்பது வழக்கம். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஷியாம் சுந்தரி, காவல் நிலையத்தில் புகார் அளித்து விட்டு, தனியாக வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், மகளைப் பார்க்க வந்த பெற்றோரிடம் "இனி தன்னால் கணவருடன் சேர்ந்து வாழமுடியாது," என ஷியாம் சுந்தரி கூறியுள்ளார்.
இதையடுத்து, அங்கிருந்து கிளம்பிய மனைவியின் பெற்றோருடன் மருமகன் ராஜு தனது இரு உறவினர்களுடன் சேர்ந்து வம்பிழுத்துள்ளார். அத்துடன், திடீரென கோபத்தில் மாமியாரின் மூக்கை அறுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து காவலர்கள் விசாரித்து வருகின்றனர். தனது மனைவியை மாமியார் தான் தூண்டிவிட்டு பிரச்சினை உருவாக்குவதாகக் கூறி மருமகன் ராஜு மூக்கை அறுத்ததாகக் கூறப்படுகிறது.

