லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஷிப்ரா பதக் என்ற பெண் ஆர்வலர் வசித்து வருகிறார். இவரை 'தண்ணீர்ப் பெண்' என்றே பலரும் அழைக்கின்றனர். ஏனெனில், இவர் மாசடைந்து வரும் கோமதி நதியைக் காக்கும் வகையில், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த 690 கிலோ மீட்டர் தூர நடைப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் கங்கையின் கிளை நதியான கோமதி ஆறு 690 கி.மீ. தூரம் வரை பாய்கிறது. ஆக்கிரமிப்புகளும் கழிவுகளும் சேர்வதால் ஆறு மாசடைந்து வருகிறது. இந்நதியைக் காக்கும் நோக்கத்தில் அவர் தன் நடைப்பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
இதுபற்றி ஷிப்ரா கூறுகையில், "நதிக்கரையோரம் வசிக்கும் மக்கள் நதியைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறார்கள். இதற்கு என்ன செய்வது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. நான் இந்த யாத்திரை மூலம் நதியைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க அவர்களை ஊக்கப்படுத்தி வருகிறேன். இதனால் நல்லது நடக்கும் என நம்புகிறேன். எனக்கு ஆதரவாக பலரும் பாதயாத்திரையில் இணைந்துள்ளனர்," என்று தெரிவித்தார். மாசடைந்து வரும் நதியைப் பாதுகாக்க 690 கி.மீ. தூரம் நடப்பதற்கு ஷிப்ரா பதக் எடுத்துள்ள துணிச்சலான முயற்சியைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

