புதுச்சேரி: இந்தியாவில் எச்3என்2 என்னும் புதுவகை சளிக்காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்து வருகிறது.
புதுச்சேரி, காரைக்காலில் ஹெச்3என்2 என்றழைக்கப்படும் புதுவகை சளிக்காய்ச்சல் நோய் பரவி வருகிறது.
அதனையடுத்து அங்கு தொடக்கப்பள்ளிகளுக்கு 10 நாள்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் ஹெச்3என்2 சளிக்காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தப் புதிய வகை வைரஸ் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோரைத் தான் அதிகம் தாக்கும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடவேண்டும் என்று பேரவையில் கோரிக்கை விடப்பட்டிருந்தது.
இந்நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவையில் கல்வியமைச்சர் நமச்சிவாயம் நேற்று (மார்ச் 15) சிறார்கள் பயிலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவித்தார்.
அந்த அறிக்கையில், "புதுச்சேரியில் வைரஸ் தொற்று பரவி குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.
புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு வட்டாரங்களில் 8ஆம் வகுப்பு வரையிலான அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் வரும் 16 முதல் 26 வரை விடுமுறை விடப்படுகிறது,'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சுகாதாரத்துறை, "புதுச்சேரியில், அனைத்து மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்கு என்று சிறப்புப் புறநோய் சிகிச்சைப் பிரிவு செயல்பட்டு வருகிறது," என்று கூறியுள்ளது.
இந்நிலையில், 2023 ஜனவரிமாதம் முதல் எடுக்கப்பட்ட 2,529 மாதிரிகளில் ஏறக்குறைய 17 விழுக்காடு அதாவது 428 மாதிரிகள் 'எச்3என்2 வைரஸ்' காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் என தேசிய வைரலாஜி இன்ஸ்டிடியூட் (என்ஐவி) தெரிவித்துள்ளது.
குறிப்பாக ஐந்து வயதுக்கு குறைவான குழந்தைகளிடம் இவ்வகை சளிக்காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து, இந்த வயதுப் பிரிவில் உள்ள குழந்தைகள்தான் அவசர சிகிச்சைப் பிரிவில் (ஐசியு) அதிக அளவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து என்ஐவி விஞ்ஞானி வர்ஷா பொட்தர் கூறுகையில், "புனே மாவட்டத்தில் புதுவகை சளிக்காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்குக் கடுமையான சுவாசப் பிரச்சினை காணப்படுகிறது," என்றார்.

