புவனேஸ்வர்: உளவுச் சாதனங்கள் மற்றும் கேமராவுடன் வந்த புறா ஒன்று ஒடிசா மாநில மீனவர்களிடம் சிக்கியது. இந்தப் புறா உளவு பார்க்க அனுப்பப்பட்டதா என காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
ஒடிசா மாநிலத்தின் பாரதீப் துறைமுகம் அருகே 40 கடல் மைல் தொலைவில் அண்மையில் அந்த மாநில மீனவர்கள் தங்களது சாரதி என்ற படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது தங்களது படகில் ஒரு வெள்ளை நிறப் புறா வந்து அமர்ந்ததை மீனவர்கள் பார்த்தனர். அந்த புறாவைப் பிடித்து பார்த்தபோது அதன் கால்களில் புகைப்படக்கருவி, மைக்ரோசிப் போன்ற உளவுச் சாதனங்கள் பொருத்தப்பட்டு இருப்பது தெரியவந்தது.
கேமரா தெரியாதவகையில் அதன் மீது கறுப்புப் பசை நாடாவால் ஒட்டப்பட்டு இருந்தது. மேலும், புறாவின் இறக்கைகளில் வெளிநாட்டு மொழிகளில் ஏதோ எழுதியிருந்தது. இதையடுத்து அந்தப் புறாவை காவல்துறையிடம் மீனவர்கள் ஒப்படைத்தனர்.
இந்த புறா ஒடிசா கடற்கரையில் உளவு பார்க்க அனுப்பப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.