புதுடெல்லி: கருவில் இருந்த குழந்தைக்கு ஒன்றரை நிமிட நேரத்தில் இதய அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஏற்ெகனவே மூன்று முறை கரு கலைந்திருந்த நிலையில், நான்காவது முறையாக 28 வயது கர்ப்பிணிப் பெண் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், கருவில் உள்ள குழந்தைக்கு இதயத்தில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இதுகுறித்து பெற்றோருக்குத் தெரியவர, குழந்தைக்கு சிகிச்சை அளிக்க சம்மதம் தெரிவித்தனர்.
இதையடுத்து, கருவிலேயே குழந்தைக்குச் சிகிச்சையளிக்க மருத்துவர்கள் முடிவெடுத்தனர்.
'அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்' வழிகாட்டுதலின்கீழ் தாயின் அடிவயிற்றில் துளையிட்டு கருவில் உள்ள குழந்தையின் இதயத்துக்கு மெல்லிய குழாய் மூலம் சிறிய பலூனைக் கொண்டுசென்றனர். பின்னர், திராட்சை அளவே இருந்த குழந்தையின் இதயத்தில் இருந்த அடைப்பை நீக்கினர்.
இந்த சிகிச்சை 90 வினாடிகளில் செய்து முடிக்கப்பட்டது.
இதுகுறித்து அறுவை சிகிச்சை செய்த மூத்த மருத்துவர் ஒருவர் கூறும்போது, "தாயின் அடிவயிற்றின் வழியாக கருவில் உள்ள குழந்தைக்கு இதயத்தில் ஓர் ஊசி யைச் செலுத்தி அடைப்பைச் சரிசெய்தோம். குழந்தையின் இதயம் நன்றாக வளரும் என எதிர்பார்க்கிறோம். குழந்தை பிறக்கும்போது இதய நோய் தீவிரம் குறைவாக இருக்கும். இதுபோன்ற சிகிச்சை முறை மிகவும் சவாலானது," என்றார்.

