புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க வேண்டும் என்று கோரி கேரள அரசு மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தின் தென்மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக இருப்பது முல்லைப் பெரியாறு அணை.
இந்த அணையில் 154 அடி வரை தண்ணீரைத் தேக்கி வைக்க முடியும். ஆனால் இதற்கு கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் முல்லைப் பெரியாறு அணையில் நீர் தேக்கு வது குறித்து உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
இதில் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136 அடியாக குறைக்க வேண்டும் என கேரளாவைச் சேர்ந்த ஜோசப் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கேரள அரசும் மனு செய்துள்ளது.
அந்த மனுவில் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 2002ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை முல்லைப் பெரியாறு அணை பகுதியில் 138 சிறிய நில அதிர்வுகள் ஏற்பட்டதாகக் கூறியது. எனவே நீரியல், கட்டுமானம், புவியியல் நிலநடுக்கம் உள்ளிட்ட அம்சங்கள் அடிப்படையில் அணையின் பாதுகாப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.