கொழும்பு: இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை கடற்பகுதிக்குள் நுழைந்து மீன்பிடித்தால் அவர்களுக்கு எதிராக கடலிலேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுங்கள் என்று இலங்கை மீனவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுரை வழங்கியிருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களின் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மீன்பிடித் தொழிலில் பல்வேறு சிரமங்களை தமிழ்நாட்டு மீனவர்கள் அனுபவித்து வருகின்றனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் நிகழ்வுகள் தொடர் கதையாகவே நடைபெற்று வருகிறது.
இந்தியாவுக்குச் சொந்தமான தமிழ்நாட்டை ஒட்டியிருந்த கச்சத் தீவை இந்தியா அப்படியே இலங்கைக்குத் தாரை வார்த்ததில்இருந்து இந்தப் பிரச்சினை நீடித்து வருகிறது. தமிழக மீனவர்கள் இலங்கையில் உள்ள சிறைகளில் அடைக்கப்படுவதும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. மீன்பிடிப்பதையை தங்களது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள தமிழக மீனவர்கள் இத்தகைய தொடர் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய மீனவர்களுக்கு எதிராக கடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுமாறு இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக இலங்கையின் மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் இத்தகவலை அவர் தெரிவித்தார்.
"எல்லை தாணடும் இந்திய மீனவர்களை இலங்கை படையினர் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கும்பொழுது அது வேறுவிதமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், எல்லை தாண்டும் இந்திய மீனவர்களைக் கண்டித்து எமது மீனவர்களை கடலில் ஆர்ப்பாட்டம் செய்யுமாறு அறிவுரை வழங்கியிருக்கிறேன்," என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.