கோல்கத்தா: அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைத்து ஆட்சியைக் கைப்பற்ற எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்துள்ளன.
எதிர்வரும் தேர்தலில் ஆளும் பாஜகவை தோற்கடிக்க அனைத்து எதிர்க்கட்சியினரையும் ஓரணியில் திரட்டும் முயற்சிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குரல் கொடுத்து வருகிறார்.
எனினும், இவ்விஷயத்தில் ஒருமித்த கருத்து ஏற்படாமல் இழுபறி நிலவுகிறது.
அத்துடன், காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சியினரின் கூட்டணியை அமைக்க முக்கிய கட்சிகள் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்குவங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியும் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவும் கோல்கத்தாவில் சந்தித்துப் பேசியபோது, புதிய அணியை உருவாக்குவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மம்தா பானர்ஜி வரும் 23ஆம் தேதி ஒடிசா முதல்வரும் பிஜு ஜனதா தள தலைவருமான நவீன் பட்நாயக்கை சந்திக்க உள்ளார்.
அத்துடன், டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலையும் தெலுங்கானா மாநில முதல்வரும் பிஆர்எஸ் கட்சித் தலைவருமான சந்திரசேகர ராவையும் அடுத்தடுத்த வாரத்தில் சந்தித்துப் பேச மம்தா தயாராகி வருகிறார். இவர்கள் அனைவரும் சேர்ந்து காங்கிரஸ் அல்லாத அணியை உருவாக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.