மும்பை: ஆசியாவிலேயே முதன்முறையாக முழுமையான கை மாற்று அறுவை சிகிச்சை இந்தியாவில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
மும்பை குளோபல் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் 16 மணி நேரமாக அந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டு, நோயாளிக்கு இருவேறு கைகளைப் பொருத்தினர்.
ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரைச் சேர்ந்தவர் பிரேம ராம். இவர், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு வயலில் வேலை பார்த்த போது, தற்செயலாக மின்கம்பத்தைத் தொட அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது.
இதையடுத்து, அவரது உயிரைக் காப்பாற்ற வேண்டுமெனில், கைகளை வெட்டியே ஆகவேண்டும் என மருத்துவர்கள் கூறிவிட்டதால், ஜெய்ப்பூர் மருத்துவமனையில் பிரேம ராமின் கைகள் முழுவதுமாக வெட்டப்பட்டன.
செயற்கைக் கைகளைப் பெற இவரின் குடும்பத்தினர் முயன்றாலும் அவற்றால் எவ்வேலையையும் செய்யமுடியாது.
எனினும், பிரேம ராம் நம்பிக்கை இழக்காமல், மும்பை குளோபல் மருத்துவமனையில் கை மாற்று அறுவை சிகிச்சைக்கு தம் பெயரைப் பதிவுசெய்தார்.
இந்நிலையில், சென்ற மாதம் 9ஆம் தேதி அம்மருத்துவமனையில் இவருக்குக் கை மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, இம்மாதம் 9ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
அடுத்த 18-24 மாதங்களுக்கு இவர் இயன் சிகிச்சையைத் (பிசியோதெரபி) தொடரவேண்டும். 18 மாதங்களில் இவரது கை ஓரளவு செயல்பாட்டிற்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுவதாக 'மிட் டே' செய்தி தெரிவிக்கிறது.

