பாட்னா: வாகன விபத்துகளையும் அதனால் ஏற்படும் உயிரிழப்பு களையும் தடுக்கும் வகையில், 56,000 தலைக்கவசங்களை பீகார் ஆடவர் ஒருவர் இலவசமாக வழங்கியுள்ளார்.
'இந்தியாவின் தலைக்கவச மனிதர்' என்று தம்மைக் கூறிக்கொள்ளும் திரு ராகவேந்திர குமார், 36, இணையவாசிகளிடையே பரவலாக அறியப்பட்டவர்.
கடந்த 2014, மார்ச் 28ஆம் தேதி கிருஷ்ணகுமார் என்ற இவரின் நண்பர், சாலை விபத்தில் சிக்கி மாண்டுவிட்டார்.
தலைக்கவசம் அணியாமல் மோட்டார்சைக்கிளில் சென்றதால் அவர் தலையில் காயமடைந்து இறந்துபோனார்.
இதனால் பெரிதும் மனமுடைந்துபோனார் திரு ராகவேந்திரா. அந்நிகழ்வு இவரின் வாழ்க்கையையே திசைமாற்றியது.
அதன்பின் தமது வேலையைவிட்டுவிட்ட இவர், சாலையில் தலைக்கவசமின்றி மோட்டார்சைக்கிளில் செல்வோருக்கு இலவசமாகத் தலைக்கவசம் வழங்குவதையே வேலையாக்கிக் கொண்டார். கடந்த ஒன்பது ஆண்டுகளில் இவர் 56,000 தலைக்கவசங்களை இலவசமாக வழங்கியுள்ளார். இதற்காக இவர் கிட்டத்தட்ட ரூ. 2 கோடி வரை செலவுசெய்துள்ளார்.
இதற்காக நொய்டாவிலிருந்த தம் வீட்டை ரூ.52 லட்சத்திற்கு விற்றுவிட்டார்; தம்மிடமிருந்த 14 மின்னிலக்க நாணயங்களை ரூ.75 லட்சத்திற்கு விற்றார். அத்துடன், இவரின் மனைவியும் தம்மிடமிருந்த நகைகளை விற்று ரூ.15 லட்சம் கொடுத்தார். கையிலிருந்த சேமிப்பு முழுவதும் தலைக்கவசம் வாங்குவதிலேயே கரைந்துபோனது.
கடந்த ஒன்பது ஆண்டுகளில் 30 பேரின் உயிரைக் காப்பாற்றி இருப்பதாகச் சொன்னார் ராகவேந்திரா. அண்மையில் இவர் ஆக்ரா-லக்னோ நெடுஞ்சாலையில் தலைக்கவசமின்றி மோட்டார்சைக்கிளில் சென்ற இளையர் ஒருவரை நிறுத்தி, இலவசமாகத் தலைக்கவசம் வழங்கிய காணொளி இணையத்தில் பரவியது.

